
விஷ்ணுவின் தீவிர பக்தரான சிறுவன் பிரகலாதனின் கதையும், பிரகலாதனின் பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் ஹிரண்யகசிபுவை அழித்ததும் தான் ’மகா அவதார் நரசிம்மா’.
அசுரர்களான ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் சகோதரர்கள் விஷ்ணு பெருமானை வழிபடுபவர்களை அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர். வராக அவதாரமெடுத்து ஹிரண்யாக்ஷனை வதம் செய்கிறார் விஷ்ணு. தனது சகோதரனை கொன்ற விஷ்ணுவை அழிக்க பிரம்மனிடம் கடும்தவம் புரிந்து தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெறுகிறார் ஹிரண்யகசிபு..
ஆனால், ஹிரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் விஷ்ணுவின் தீவிர பக்தனாக இருப்பதால் அவனை வெறுத்து பல்வேறு வழிகளில் பிரகலாதனை கொல்ல முயற்சிகள் செய்கிறார். மகா விஷ்ணு மீது பிரஹ்லாதனின் அசைக்க முடியாத பக்தியால் மிரண்டு போகும் ஹிரண்யகசிபு இறுதியில் மகனை வைத்து விஷ்ணுவை கொன்று வீழ்த்துவதற்கு நடக்கும் சண்டையில் தூணிலிருந்து நரசிம்ஹா அவதாரத்தில் விஷ்ணு வெளிப்படுகிறார். பாதி மனிதனும் சிங்கமுகத்துடன்; நரசிம்ம அவதாரத்தில் தன்னைக் கடவுளாகக் கருத தொடங்கிய பிரஹ்லாதனின் தந்தை ஹிரண்யகஷியப்பை அழிக்கிறார்.
கதைக்கும் காட்சிகளுக்கும் பொருத்தமான பின்னணி இசையை சாம்.சி .எஸ் கொடுத்துள்ளார். மிகவும் குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சியில் அவரது பின்னணி இசை ,காட்சிகளுக்கு தேவையான விறுவிறுப்பையும் , வேகத்தையும் அதிகரித்து ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.
அனிமேஷனையும் மிகச் சரியாக கையாண்டிருக்கின்றனர் படக்குழுவினர். குறிப்பாக கிளைமாக்ஸில் நரசிம்ம அவதாரமும், அவர் அசுரனை அழிப்பதும் மெய்சிலிர்க்க வைக்கிறது. வசன உச்சரிப்பு, இசை, காட்சியமைப்பு என அனைத்தையும் சரியாக கையாண்டு சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்..
தெரிந்த கதை என்றாலும், அதை தற்போஒதைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டிய நோக்கத்துடனும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழும்படியான அனிமேஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள். புராணக்கதைகளை தற்போதைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அஷ்வின் குமார்.









