
ஆறு நண்பர்கள் ஓர் இரவில் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் வேளையில், மோதல் ஏற்பட்டு அதில் ஒருவர் இறந்துவிட அவரை என்ன செய்வது என்று தெரியாமல் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு பயணிக்கிறார்கள். நடு இரவில், காரில் செல்லும் வழியில் அவர்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? முடிவில் என்ன நிகழ்ந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘மனிதர்கள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் உணர்ச்சி பொங்க நடித்திருக்கிறார்கள்.
எதிர்பாரத சம்பவத்தால் அச்சத்தில் உரைந்து, பதற்றத்தில் பரிதவிப்பதை சிலர் கொஞ்சம் ஓவராக நடித்து வெளிக்காட்டுவதும், சிலர் எந்தவித பதற்றமும் இன்றி பிரச்சனையை எதிர்கொள்ள தயாராவதும் என்று மனிதர்களின் மனநிலையை மிக கச்சிதமாக தங்களது நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
முழுக்க ஓர் இரவில் நடக்கும் கதைக்களத்தில், பெரும்பாலும் காருக்குள்ளேயே நகரும் கதைக்கு அட்டகாசமான காட்சி கோணங்கள் மற்றும் ஒளி அமைப்பில் ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ் கவனம் பெறுகிறார். இசையமைப்பாளர் அனிலேஷ் எம். மேத்யூ இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது
ஒரே இரவில் ஒரு காரில் பயணிக்கும் ஐந்து பேரின் மனநிலை எவ்வாறு மாறிக் கொண்டே செல்கிறது என்பதைப் படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் இராம் இந்திரா. கிரைம் திரில்லரை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் .ஆனால் ஒரு குறும்படமாக மட்டுமே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.









