Reviews

மிராய் – விமர்சனம்


புராண படங்களை எடுப்பதில் நாளுக்கு நாள் தெலுங்கு திரையுலகம் டெவலப் ஆகி கொண்டே போகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. ஏற்கனவே வெளியான ஹனுமன், கண்ணப்பா படங்களைத் தொடர்ந்து இப்போது வெளியாகியுள்ள மிராய் திரைப்படமும் அதே போன்ற ஒரு பிரமிப்பு உணர்வை கொடுக்கிறது.

அசோகர் காலத்தில் நடக்கும் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. அதாவது அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ஒரு ரகசியத்தை ஒன்பது புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். அதனை பாதுகாப்பதற்கு ஒன்பது வீரர்களையும் நியமிக்கிறார். ஆனால் தீய சக்தியான மகாபீர் என்கிற சூனியக்காரர் அந்த சாகாவரம் பெற்ற சக்தியை அடைய 9 புத்தகங்களையும் கைப்பற்ற முயற்சிக்கிறார்.

இந்த நிலையில் தான் சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதாரண வாழ்க்கை வாழும் இளைஞனான வேதாவிடம், ஒரு சன்னியாசி நீ இந்த தீய சக்தியை அழைத்து தர்மத்தை நிலைநாட்ட பிறந்தவன். அதற்காகவே நீ படைக்கப்பட்டிருக்கிறாய் என்று கூறி அவரை தூண்டி விடுகிறார். அந்த மகாபீரை அளிப்பதற்கு மிராய் என்கிற ஆயுதம் தேவைப்படுகிறது. அதை கைப்பற்ற முயற்சியில் களம் இறங்குகிறார் வேதா. அவரது முயற்சி பலித்ததா ? தீய சக்தியை தடுத்து நிறுத்தினாரா என்பது மீதி கதை.

நாயகன் வேதாவாக நடித்திருக்கிறார் தேஜா சஜ்ஜா. ஏற்கனவே ஹனுமன் என்கிற படத்தின் மூலம் வெற்றியை ருசித்தவர். தனக்கு இது போன்ற புராண படங்கள் சரியான ரூட் என்பதை கச்சிதமாக பிடித்துக் கொண்டுள்ளார். அதற்கேற்ற மிகச்சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார்.

கண்ணப்பா படத்தில் ஹீரோவாக நடித்து அசத்திய விஷ்ணு மஞ்சுவின் தம்பி மனோஜ் மஞ்சு இந்த படத்தில் வில்லனாக மகாபீர் கதாபாத்திரத்தில் பொருத்தமாக பொருந்தியுள்ளார். திறமை மிக்கவர்களே கடவுள் என்கிற அவரது கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவரது கதாபாத்திரமும் அதற்கேற்ற அவரது உருவமும் உயரமும் அவரது நடிப்பும் பொருத்தமாக அமைந்துள்ளது.

நாயகியாக கதாநாயகனுக்கு உதவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகை ரித்திகா நாயக். நடிப்பும் அழகும் இரண்டுமே ரசிகர்களை கவர்கிறது. நாயகனின் ஃப்ளாஷ்பேக்கில் அம்மாவாக வரும் ஸ்ரேயா, அகத்திய முனிவராக வரும் ஜெயராம் இவர்களும் படத்திற்கு மிக முக்கியமான பக்க பலமாக இருக்கிறார்கள்.

இது போன்ற புராண படங்களுக்கு ஒளிப்பதிவு தான் முக்கிய அம்சம்.. அதை ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டமனேனி செவ்வனே செய்திருக்கிறார். அதற்கேற்றார் போல் இசையமைப்பாளர் கெள்ரா ஹரியின் பின்னணி இசையும் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்துகிறது.

படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்கியிருக்கிறார். புராண படங்களை அதிலும் கொஞ்சம் ஆன்மீகம் கலந்து ரசிகர்களுக்கு எப்படி கொடுத்தால் அவர்கள் ரசிப்பார்கள் என்கிற வித்தையை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு படம் முடியும் வரை நம்மை இருக்கையிலேயே கட்டிப்போட்டு விடுகிறார். அசோகர் காலத்து கதை, ராமாயண காலத்து மிராய் என்கிற ஆயுதம் இவற்றையெல்லாம் கலந்து கட்டி ஒரு கமர்சியல் விருந்து பரிமாறி இருக்கிறார்.

மிராய் – மிரட்டல்