
காளக்கம்மாய்பட்டி ஊரில் ஒற்றுமையாக வாழும் மக்கள் தாங்கள் வழக்கம்போல நடத்தும் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு திருவிழா நடத்த தாமதமாவதால் யாரோ தெய்வ குற்றம் செய்திருக்கிறார்கள் என நினைக்கிறார்கள். இதனால் ஏற்படும் சச்சரவு ஊர் பிரச்சினையாக மாறி ஊரே இரண்டாக பிளவுபட்டு காளப்பட்டி கம்மாய்பட்டி என பிரிகிறது.
ஊர் இரண்டு பட்டால் அரசியல்வாதிக்கு கொண்டாட்டம் என்பது போல ஊர் மக்களை அரசியலும் பிரித்தான நினைக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த காளி வெங்கட் இந்த மக்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார். ஆனால் அவரது நண்பரான அர்ஜுன் தாஸ் தாஸ் இந்த பிரச்சனை வேண்டாம் என ஊரை விட்டு வெளியேற நினைக்கிறார்.
இந்த சமயத்தில் தான் எதிர்பாராத விதமாக காளி வெங்கட் திடீரென மரணமடைகிறார். ஆனால் இறந்த அவரை தங்களது சாமியாக இரண்டு ஊர் காரர்களும் சொந்தம் கொண்டாட ஆரம்பிக்க அங்கு ஒரு புதிய பிரச்சனை கிளம்புகிறது.
அப்படி காளி வெங்கட் இறப்பில் கிளம்பிய புதிய சிக்கல் என்ன ? அதை நாயகன் அர்ஜுன் தாஸ் எப்படி சமாளிக்கிறார் என்பது படத்தின் மீதி கதை.
இதுவரை முரட்டு குரலுடன் வில்லனாக பார்த்து வந்த அர்ஜுன் தாஸ் வழக்கமான ஆக்சன் பாணியில் நடிக்காமல் ஒரு அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ஒரு கிராமத்து மண்மணம் சார்ந்த பாத்திரத்தில் தன்னை மாற்றிக் கொண்டு தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
கதாநாயகி ஷிவாத்மிகா, கிராமத்து பெண்ணாக அழகும் சிரிப்பும் கலந்து, தேவையான அளவுக்கு நடித்திருக்கிறார் இருப்பினும் அவரது கதாபாத்திரம் இன்னும் வலிமையாய் வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்.
காளி வெங்கட் வித்தியாசமான கதையம்சத்தில் கொஞ்ச நேரம் தான் உயிரோடு இருந்தாலும், ஊர் மக்களின் நன்மைக்காக பாடுபடும் நல்ல எண்ணம் கொண்ட மனிதராக, அதன்பின் இறந்த பிறகும் நேர்த்தியாக தன்னுடைய தேர்ந்த நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.
இவர்கள் தவிர சிங்கம்புலி, கிச்சா ரவி, அபிராமி, பால சரவணன், நாசர், ராட்சசன் சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பி. எம். ராஜ்குமாரின் கேமரா இந்த கிராமத்து கதையின் இன்னொரு ஜீவனாகவே மாறி இருக்கிறது. டி.இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
சாதிய பிரச்சனைகள ஆக்ரோஷமாக சொல்லி இன்னும் கூட தூண்டி விடும் விதமாக படங்கள் வெளிவரும் இந்த காலகட்டத்தில்’ சாதியால் பிரிந்து கிடக்கும் ஊரை ஒன்று சேர்க்க இறந்துபோன ஒரு மனிதர் மூலம் நகைச்சுவை கலந்த யோசனையாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார். இரண்டு பிரிவாகப் பிளந்த மக்களை சாமர்த்தியமாக நம்பிக்கையின் வழியாக இணைத்துக் காட்டியிருப்பது இயக்குநரின் திறமை. ..









