Reviews

ரெட்ட தல ; விமர்சனம்


சிறுவயதில் அனாதையாக இருக்கும் அருண்விஜய் (காளி) தன்னுடன் ஆதரவாக பயணிக்கும் இன்னொரு வசதியற்ற சிறுமியான சித்தி இத்னானியுடன் நட்பாக பழகுகிறார். பல வருடங்களாக வெளியூருக்கு சென்றிருந்த காளி தனது காதலியை சந்தித்து காதலை சொல்லி அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் வருகிறார். ஆனால் காளியை காதலித்தாலும் அவர் வசதியற்றவர் என்பதால் அவரை திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் மனம் வெறுத்து போய் சாலையில் நடக்கும் காளி மீது ஒரு கார் மோதுகிறது. அந்த காரில் இருந்து இறங்குகிறார் ஒருவர். அவரும் அருண் விஜய் (உபேந்திரா) தான். தன்னைப் போலவே உருவ ஒற்றுமையுடன் இருக்கும் காளியை பார்த்து அவரது கதையைக் கேட்டு தன்னுடைய கெஸ்ட் ஹவுஸில் தங்க அழைத்துச் செல்கிறார் உபேந்திரா.

கோவாவில் இருந்து 15 நாட்கள் சுற்றுலா விஷயமாக பாண்டிச்சேரி வந்திருப்பதாக கூறும் உபேந்திரா, காளியையும் தன்னைப்போல பணக்காரத் தோற்றத்திற்கு மாற்றுகிறார். தன்னுடைய கார், பணம் அனைத்தையும் கொடுத்து உன்னுடைய காதலியுடன் ஒரு நாள் நன்றாக என்ஜாய் பண்ணு என்று அனுப்புகிறார். காளியின் இந்த புதிய தோற்றம், கார், வசதி காதலியின் மனதை அசைத்துப் பார்க்கிறது. அன்று இரவு தான் காளியை போன்ற இன்னொரு அருண் விஜய் இருக்கிறார் அவருடையது தான் இது எல்லாம் என்று தெரிய வருகிறது. அப்போது பணக்கார அருண் விஜய்யை போட்டு தள்ளிவிட்டு அதே பேரில் நீ இருந்து கொள், நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஐடியா கொடுக்க, காதல் போதையில் யோசிக்காமல் காளியும் பணக்கார அருண் விஜய்யை சுட்டுக் கொள்கிறார்.

அதன் பின்னர் தான் தெரிய வருகிறது பணக்கார அருண் விஜய்க்கு ஒரு கால் செயற்கையாக பொருத்தப்பட்டது என்பதும், அதற்கு பிறகு போலீஸ் அதிகாரி ஜான் விஜய் மூலமாக அவர் ஏற்கனவே கோவாவில் மிகப்பெரிய அமைச்சர் ஒருவரின் மகனை கொலை செய்த குற்றத்திற்காக ஜெயில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த நிலையில் தற்போது பரோலில் 15 நாட்கள் வந்திருக்கிறார் என்றும், 15 நாட்கள் கழித்து மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதும் தெரிய வருகிறது.

இதை அறிந்து அதிர்ச்சியாகும் அருண் விஜய் அடுத்து என்ன முடிவு எடுக்கிறார் ? இருவருக்குமான வித்தியாசம் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட மற்றவர்களுக்கு தெரிய வந்ததா ? இவர் பரோலில் வந்த விஷயம் கேள்விப்பட்டு பாண்டிச்சேரிக்கு துரத்தி வரும் இறந்து போன பையனின் அப்பா ஹரிஷ் போராடி அண்ட் கோ அருண் விஜய்யை வேட்டையாடியதா இந்த ஆள் மாறாட்ட உண்மை அவர்களுக்கும் தெரிந்ததா என்பதெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளுடன் விறுவிறுப்பான ட்விஸ்ட் ஆக மீதி கதையாக நகர்கிறது

அருண்விஜய்க்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் கதை சிக்குகிறது என எண்ண தோன்றும் விதமாக இந்த ஆள் மாறாட்ட கதையில் தன்னை ஒரு முழு ஆக்சன் ஹீரோவாக வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக தன்னைப் போல இருக்கும் இன்னொரு நபரை கொன்றவுடன் அவருக்கு பின்னால் இருக்கும் அதிரடியான பயங்கரமான உண்மைகள் தெரிய வருவதும், அதை எதிர்கொள்ள போராடுவதும் இடையில் அலைபாயும் காதலியின் மனநிலையை கணக்கிட முடியாமல் தடுமாறுவதும் என நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். இந்த படம் அவருக்கு இன்னொரு தடம் என்று சொன்னால் ஆச்சரியம் இல்லை.

கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு பட புகழ் சித்தி இத்னானி நடித்துள்ளார். இந்த படத்தில் காதலுக்கும் பேராசைக்கும் இடையே ஊசலாடும் மனநிலை கொண்ட ஒரு அடித்தட்டு பெண்ணின் மனநிலையை படம் முழுவதும் அழகாக பிரதிபலித்திருக்கிறார் சித்தி இத்னானி. பல காட்சிகளில் ஒரு பக்கம் சிருஷ்டி டாங்கே போல கண்ணக்குழி அழகியாகவும் இன்னொரு பக்கம் சமீரா ரெட்டி போலவும் காட்சி அளிப்பது அவருக்கு பிளசா மைனசா என்பது தெரியவில்லை.

ஜான்விஜய் வழக்கமான ஒரு போலீஸ் அதிகாரி போல கிச்சுகிச்சு சேட்டைகள், கொஞ்சம் சைக்கோ காமெடிகள் என இதிலும் தொடர்கிறார். அவர் ஒரு நல்ல நடிகர். பா. ரஞ்சித் போன்றவர்கள் அவரை மிகச்சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் மற்ற இயக்குனர்கள் வித்தியாசமான கதையை எடுத்தாலும் கூட ஜான் விஜய் விஷயத்தில் கண்டு கொள்வது இல்லை போல தெரிகிறது. கெட்ட போலீஸ் அதிகாரி என்றால் எல்லா படங்களிலும் ஒரே போல தான் இருக்க வேண்டுமா என்ன ? தயவுசெய்து அவரை போலீஸ் அதிகாரியாக நடிக்க வைக்காதீர்கள் இல்லை என்றால் அவருக்கான மிக சரியான கேரக்டர் ஸ்கெட்ச்சை உருவாக்குங்கள் இயக்குனர்களே.

இறந்து போன இளைஞனின் மனைவியாக தான்யா ரவிச்சந்திரன். கோபம் கொப்பளிக்க தன் கணவனை கொன்றவனை தேடுவதும் அவருக்கு உறுதுணையாக அண்ணன் யோகி சாமி, மாமனார் ஹரிஷ் பெராடி ஆகியோர் அருண் விஜய்யை பலி கொடுக்க தேடுவதும் என அவரவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கோவா, பாண்டிச்சேரி என சுற்றிச்சுற்றி பறந்து காட்சிகளை நம் கண்களுக்குள் திணித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜே டாமி. கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் பார்த்தது போல உணர்வு ஏற்படுகிறது. விறுவிறுப்பான கதை ஆக்சன் காட்சிகள் அதிகம் என்பதால் ஒரு பாடலுடன் நிறுத்திக் கொண்டுவிட்டு பின்னணி இசையில் சாம் சி.எஸ் வழக்கம்போல அதிர விட்டுள்ளார்/

படம் விறுவிறுப்பாக செல்வதால் படத்தில் உள்ள லாஜிக் குறைபாடுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம் கத்தியால் குத்தப்படும் கதாநாயகி, துப்பாக்கியால் சுடப்படும் கதாநாயகி இவர்கள் உடனடியாக இறக்கிறார்கள்/ ஆனால் துப்பாக்கியால் சுடப்படும், கத்தியால் குத்தப்படும் கதாநாயகன் பிழைத்துக் கொள்கிறார். அடுத்தடுத்த காட்சிகளில் மீண்டும் சண்டை போடுகிறார்கள். யார் சாக வேண்டும், யார் பிழைக்க வேண்டும் என திரைக்கதையை தன் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன்.

ஆனாலும் இந்த கேள்விகள் எல்லாம் படம் முடிந்து வெளியே வந்தபின் தான் தோன்றுமே தவிர படம் பார்க்கும் விறுவிறுப்பில் இவை காணாமல் போய்விடும்.

ரெட்ட தல ; நிச்சயமாக ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்