Reviews

சிறை ; விமர்சனம்


வருடத்தில் சில படங்களாவது நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாக வருடத்தின் இறுதி கட்டத்தில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் கதை பஞ்சத்தில் டல் அடித்துக் கொண்டிருந்த இந்த சமயத்தில் வெளியாகி உள்ளது சிறை திரைப்படம். அதுவும் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பதால் நம்பி செல்லலாம் என்கிற உணர்வுடன் தியேட்டருக்கு சென்றால் நம் நம்பிக்கையை 100% விக்ரம் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் காப்பாற்றி இருக்கிறார்கள்.

சிறையில் இருந்து கோர்ட்டுக்கு கைதிகளை அழைத்து சென்று திரும்பி கொண்டு வந்து விடும் ஆயுதப்படை போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு. அப்படி ஒரு முறை அவர் அக்ஷய் குமார் என்கிற கைதியை அழைத்துச் செல்லும்போது அவர் எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் அவருக்கு பின்னால் நடைபெற்ற அநீதி என்ன என்பதெல்லாம் தெரிய வருகிறது. அவருக்கு எந்த வகையிலாவது உதவி செய்யலாம் என தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி முயற்சிக்கிறார் விக்ரம் பிரபு. அவரால் அது முடிந்ததா ? இல்லை ஆட்சி அதிகார வர்க்கத்தால் அவர் நினைத்ததை செய்ய முடியாமல் போனதா என்பது மீதிக் கதை.

கம்பீரமான பார்வை, கருத்தில் நேர்மை, உடலில் உறுதி என்று துணிவுமிக்க காவலரின் கதாபாத்தில் தன்னை மிக இயல்பாக பொருத்திக்கொண்டு ரசிக மனங்களை தன் நடிப்பால் சிறை பிடித்திருக்கிறார் விக்ரம் பிரபு.

துணிவுமிக்க காவலரின் கதாபாத்திரம்தான் கதாநாயகன். அந்த கேரக்டரில் தன்னை மிக இயல்பாக பொருத்திக்கொண்டு ரசிக மனங்களை தன் நடிப்பால் சிறை பிடித்திருக்கிறார் விக்ரம் பிரபு.

அறிமுக இளம் நடிகர் எல்.கே.அக்‌ஷய் குமார், கோபம், காதல், ஆற்றாமை, ஏமாற்றம் என எல்லா உணர்வுகளையும் பத்து படம் நடித்த அனுபவ நடிப்பை முதல் படத்திலேயே கொடுத்திருக்கிறார்.

அவரது காதலியாக வரும் அனிஷ்மா அனில் குமாரும். நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார். கிராமத்து வைராக்கியமிக்க இளம்பெண்ணாக தன்னுடைய கதாபாத்திரத்தை நடிப்பால் மிளிர செய்துள்ளார்..

அனிஷ்மாவின் தாய் மற்றும் சகோதரி, அவளது கணவராக நடித்திருப்பவர்களும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் வகையில் பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் கதாபாத்திரங்களை நடிகர்களாக அல்லாமல், கதைக்களத்தில் வாழும் மனிதர்களாக தனது கேமரா மூலம் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச அதிகாரத்தில் எளிய மக்களுக்கு கூடுமான வரை நல்லன செய்ய வேண்டும் என படத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி. மனிதர்களின் ஒவ்வொரு நிலையிலும் அவர்களுக்குள்ளே எழுந்து வரும் ஆணவம், கனிவு, இழிவு என அனைத்தையும் நுணுக்கமாகக் காட்டியுள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர்தமிழ் எழுதிய கதை வழக்கமானது போல இருந்தாலும், அதை தனது திரைக்கதை மற்றும் இயக்கம் மூலம் மிக வலிமையான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி..