Reviews

ரைட் ; விமர்சனம்


நடிகர் நட்டி இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்று புகார் அளிக்க வருகிறார் அருண்பாண்டியன். அதே சமயம் ஏட்டு மூணாறு ரமேஷ் திருட்டு சம்பவம் மூலமாக கைப்பற்றப்பட்ட ஒரு லேப்டாப்பை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்து அதை எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார். அப்போது அங்கே வரும் எஸ்ஐ அக்ஷரா அந்த லேப்டாப்பை எப்படி இயக்குவது என அவருக்கு சொல்லிக் கொடுக்கிறார்.

அந்த லேப்டாப் ஓப்பன் ஆனதும் ஒரு மர்ம குரல் மூணாறு ரமேஷ் அமர்ந்துள்ள நாற்காலியின் கீழ் பாம் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டேசனை சுற்றியும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தான் சொல்லும் விஷயங்களை எல்லாம் நிறைவேற்றினால் மட்டுமே தப்பிக்க முடியும் என்றும் உத்தரவிடுகிறது.

அது மட்டுமல்ல ஸ்டேஷனுக்குள் வரும் யாரும் மீண்டும் வெளியே செல்ல முடியாது, அப்படி சென்றால் பாம் வெடித்து சாவார்கள் என்றும் எச்சரிக்கிறது. இப்படி எதற்காக அந்த மர்ம குரல் ஸ்டேஷனை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி வைக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அருண் பாண்டியன் மகன் காணாமல் போனதற்கும் இப்படி தற்போது அவர் ஸ்டேஷனிற்கு வந்திருக்கும் சூழலில் இப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா ? இந்த சமயத்தில் வெளியே பிரதமரின் பாதுகாப்பு காரணத்திற்காக சென்று நட்டி ஸ்டேஷனுக்குள் வந்தாரா ? இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு கண்டார்கள் என்பது விறுவிறுப்பான மீதிக்கதை.

ஆரம்ப காட்சியில் வரும் இன்ஸ்பெக்டர் ரகுராமன் நட்டி சுப்ரமணியம் அதன் பின் முக்கிய தருணத்தில் இணைந்து கதையின் திருப்பத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து விறுவிறுப்பை கூட்டியுள்ளார். பின்பாதியில் அவர் கேரக்டர் கனம் பெற்றுவிட்டது. குறிப்பாக க்ளைமாக்ஸில் அசத்தி விட்டார் நட்டி.

பெண் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அக்ஷரா ரெட்டி நடித்திருக்கிறார். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்பட்டு பிரச்சனை சமாளிக்க முயற்சிப்பது என உண்மையான போலீஸ் அதிகாரி போலவே அவர் நடித்து அசத்தியிருக்கிறார்அருண்பாண்டியன், பல இடங்களில் தனது மிகை நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சிக்கிறார். .
காவலராக நடித்திருக்கும் மூணார் ரமேஷ் கூடுதல் கவனம் பெறுகிறார். நீதிபதியாக நடித்திருக்கும் வினோதினி, இளம் ஜோடியாக நடித்திருக்கும் ஆதித்யா சிவகுமார் மற்றும் யுவினா, கைதியாக நடித்திருக்கும் தங்கதுரை ஆகிய அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்..

குணா பாலசுப்பிரமணியனின் பின்னணி இசை ஓகே.. ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ், ஒரே இடத்தில் படமாக்க நேர்ந்திருப்பதால் கோணங்களை மாற்றிப் போட்டு படத்தை முடித்திருக்கிறார்.

ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் பரபரப்பான ஒரு திரைப்படம் தான் இந்த ரைட். அடுத்து என்ன நடக்கும் என யாரும் யூகிக்காத வண்ணம் திரைக்கதையை எழுதி அதை சரியான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுப்பிரமணியன் ரமேஷ் குமார்..