
திரையுலகில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் நடிகர் சரவணன். எப்படி இருக்கிறது இந்த சட்டமும் நீதியும். ?
சாதாரண நோட்டரியாக புகார்களை டைப் செய்து கொடுக்கும் பணி செய்து வரும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்கிறார். வழக்கு, வாதம் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு நீதிமன்றத்தின் வெளியே உட்கார்ந்திருக்கும் தன்னிடம் உதவியாளராக சேருவது சரியில்லை, என்று சரவணன் நிராகரிக்கிறார்.
இந்நிலையில் சண்முகம் என்பவர் தனது மகளை காணவில்லை என காவல்துறையிடம் முறையிட அவர்கள் வழக்குப் பதிவு செய்யாமல், அவரை விரட்டி அடிப்பதால் நீதிமன்ற வளாகத்தில் காணாமல் போன தன் மகளுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழக்கிறார்.
தீக்குளித்து இறந்த அவருக்கு நீதியை பெற்று தர வேண்டும் என்ற முடிவுக்கு வரும் வழக்கறிஞர் சரவணன், அந்த சம்பவம் தொடர்பாக பொதுநலன் வழக்கு தொடர்கிறார். அதன் பின்னால் பல அதிர்ச்சிகரமான மர்மங்கள் அடங்கி இருக்கின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு வழக்கை கையில் எடுத்த சரவணன் ஜெயித்தாரா என்பது மீதிக்கதை.
சத்தியமூர்த்தி என்ற வழக்கறிஞராக நடித்திருக்கும் சரவணன், மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். கருப்பு அங்கி போட்டு, நீதிமன்றத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசினாலும், அளவான நடிப்பு, இயல்பான உடல் மொழி மூலம் சுந்தரமூர்த்தி என்ற சாதாரண வழக்கறிஞர் வேடத்தை மிக கச்சிதமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார் நடிகர் சரவணன்.
சரவணனின் ஜூனியராக வரும் நம்ரிதா சுறுசுறுப்பான நடிப்புடன் தனக்கு கொடுத்த பாத்திரதை கச்சிதமாக செய்திருக்கிறார். தன்னை கேலி செய்யும் சக தோழருக்கு தக்க பதிலடி கொடுக்கும் தைரியம் நிறைந்த பெண்ணாக, ஒவ்வொரு காட்சியிலும் அவரின் வசன உச்சரிப்பு, பங்களிப்பு கூடுதல் பலத்தை தந்துள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞராக நடித்திருக்கும் அருள் டி சங்கர், தற்கொலை செய்து கொள்ளும் சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் ஆகியோரும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.
.
விபின் பாஸ்கரின் இசை, கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ராவணனின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கதையோடு இணைந்து, சிறப்பாக பயணித்திருக்கின்றன.
விறு விறுப்பான திரைக்கதையில் எதிர்ப்பார்க்கும் திருப்பங்களுடன் கதையாசிரியர் சூர்யபிரதாப்.எஸ்-ன் கதையில் சுவாரஸ்யமாக ரசிக்கும்படி தொடரை இயக்கியிருக்கிறார். இயக்குனர் பாலாஜி செல்வராஜ். ஒவ்வொரு எபிசோடிலும் ஆவலை தூண்டி, என்ன நடந்திருக்கும், என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி, 7 எப்பிசோட்களையும் கண்கள் இமைக்காமல் பார்க்க வைத்திருக்கிறார்…









