Reviews

சரண்டர் ; விமர்சனம்

சட்ட மன்ற தேர்தல் நடப்பதால் திருவள்ளுரில் திருமழிசை காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர்அலிகான் தன்னுடைய கைத்துப்பாக்கியை காவலர் ரைட்டர் பெரியசாமியிடம் (லால்) சரண்டர் செய்து விட்டு போகிறார். அப்பொழுது காவல் அதிகாரிகளுக்குள் நடக்கும் வாய் தகராறில் பெரியசாமியின் தவறுதலால் கைத் துப்பாக்கி காணாமல் போய்விடுகிறது. அந்த துப்பாக்கியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பயிற்சி துணை ஆய்வாளரான நாயகன் தர்ஷன் தலைமையிலான குழு ஈடுபடுகிறது..

நான்கு நாட்களுக்குள் காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தர்ஷனுக்கு, ரவுடி சுஜித் மூலம் ஒரு பிரச்சனை வருகிறது. காரணம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிப் பணத்தை பட்டுவாடா செய்ய 10 கோடியை ஒருவரிடம் கொடுத்தனுப்பகிறார் பிரபல ரெளடியான சுஜித். செல்லும் வழியில் பணம் கொண்டு சென்ற நபர் கார் விபத்தில் சிக்க, பணம் தொலைந்து விடுகிறது. பணத்தைத் தேடி அலைகின்றார் சுஜித்.

காணாமல் போன துப்பாக்கி, காணாமல் போன ரூ.10கோடி ஆகிய இரண்டு பிரச்சனைகளும் சந்திக்கும் புள்ளி எது? அதன்பின் ஏற்படும் புதிய பிரச்சனைகள் என்ன? அவற்றிற்கு எல்லாம் எவ்விதம் தீர்வு காணப்பட்டது? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘சரண்டர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் தர்ஷனுக்கு காவல்துறை சீறுடை கச்சிதமாக பொருந்துவதோடு, கம்பீரமாகவும் காட்சியளிக்கிறார். நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கும் தர்ஷன், ஆக்‌ஷன் காட்சிகளிலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

கனகுவாக சுஜித் வில்லனாக படம் முழுவதும் மிரட்டும் விழிகள், அதட்டும் பேச்சு, அஞ்சாத நெஞ்சுடன் களமிறங்கி அலட்டல் இல்லாமல் மிரட்டியுள்ளார். ரைட்டர் பெரியசாமியாகக் குணசித்திர வேடத்தில் பின்னியுள்ளார் லால். பெண் உதவி ஆய்வாளரிடம், ‘நான் உங்களுக்குப் போட்டியா?’ எனக் கேட்கும்போதும், உள்ளாடையோடு நிற்க வைத்ததால் கூனி குறும்போதும் கலக்கியுள்ளார்.

ஆய்வாளராக வரும் அருள் D. ஷங்கர்க்கு மிகச் சிறப்பான வேடம் அளிக்கப்பட்டுள்ளது. அக்கதாபாத்திரத்தில் அவர் நேர்த்தியாக நடித்துள்ளார். எதற்கும் அடங்காத, நினைத்ததைச் செய்யும் இளங்காளை பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் கெளஷிக்.. துப்பாக்கி வாங்க வரும் முனிஷ்காந்த் அத்தியாயம் மட்டும் சற்றே ஒட்டாமல் தனி ட்ராக்கில் பயணிப்பது போலிருந்தது

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் இரவு நேர காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் மிகச்சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் விகாஷ் படிஷாவின் பின்னணி இசை படத்தின் பரபரப்பையும், விறுவிறுப்பையும் அதிகரிக்கச் செய்கிறது.

காவல்துறையில் பணிபுரியும் மேலதிகாரிகளுக்குள் இருக்கும் ஈகோ மற்றும் அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் , அரசியல் செல்வாக்குமிக்க ஒரு தாதாவின் கொலை வெறித்தனம் என விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ஒரு முழு நீள சஸ்பென்ஸ் படமாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கௌதம் கணபதி..