
பிரியாணி சமைப்பதில் கைதேர்ந்தவரான கதையின் நாயகன் கனகு (உதயா), சட்டமன்ற உறுப்பினர் குணசேகரை (பவன்) அவரது பங்களாவுக்குள்ளே புகுந்து அவரை வெட்டி படுகொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
உதயாவை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, அழைத்துச் செல்கிறார்கள் போலீஸார். அந்த குழுவில் கான்ஸ்டபிளாக இருக்கும் அஜ்மலும் செல்கிறார். போலீசார் தங்களது வேனில் பயணிக்கும் போது வாகனம் பழுதடைய அரசு பேருந்தில் பயணம் செல்ல நேரிடுகிறது.
அந்தப் பயணத்திலேயே அவரைக் கொலை செய்ய ஒரு குழு முயல்கிறது.காவல்துறையில் ஒரு பிரிவினரும் அவரைக் கொல்ல முயல்கிறார்கள்.இந்த உதயா யார்? அவரை ஏன் கொல்ல வேண்டும்? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் அக்யூஸ்ட் படம்.
ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், காதல், நகைச்சுவை காட்சிகளில் அசத்தியிருக்கும் உதயா, கணக்கு என்ற தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, அளவாக நடித்து பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்று விடுகிறார்.
கான்ஸ்டபிள் வேந்தனாக அஜ்மல் போலீஸ் வேலைக்கு ஏற்ற விரைப்புடன் நடந்து கொள்வது, அதிகாரிகளுக்கு அடி பணித்து வேலை செய்வது, நேர்மைக்கு தலைவணங்கி தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியாக செய்து உதயாவுடன் படம் முழுவதும் சாலை பயணத்தில் உடனிருந்து காப்பாற்றும் ஆபத்துக்கு உதவுபவராக அடக்கமான அழுத்தமான நடிப்பால் கவர்கிறார்.
நாயகனின் காதலி மலராக ஜான்விகா கலகேரி நடித்திருக்கிறார். பார்க்க அழகாக இருக்கிறார். முதலில் நாயகனுடன் ரொமான்ஸ் செய்வது, பின்னர் வேறொருவருக்கு மனைவியாகி தவிப்பது, பெற்ற மகளை காப்பாற்றக் கதறுவது என பன்முக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
யோகி பாபு வரும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது. அரசியல்வாதியாக வரும் பவன், அவரது மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா, பவன் தம்பியாக நடித்திருக்கும் ஸ்ரீதர், தயா பன்னீர்செல்வம், இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ், நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் தீபா பாஸ்கர், அரசியல்வாதியாக நடித்திருக்கும் டி.சிவா என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
நரேன் பாலகுமார் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது..
ஒளிப்பதிவாளர் மருதநாயகத்துக்கு தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதைக்களம் அமைந்திருக்கிறது.சண்டை மற்றும் சாலைக் காட்சிகளில் அவருடைய உழைப்பு வெளிப்பட்டிருக்கிறது.
ஒரு கைதியும், ஒரு போலீஸும் ஒன்றாகப் பயணிக்கும் ஒரு வரிக்கதைக்கு நல்ல விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ். கமர்ஷியல் ஆக்ஷன் கதையை பல திருப்பங்களோடு சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால் இன்னும் கொஞ்சம் சீரியஸாகவே கதையை அவர் அணுகியிருக்கலாம்..
.
.
.









