
பிரபல எழுத்தாளர் லோகு கார் ஓட்டி செல்லும் போது ஒரு மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார்/ அந்த வழக்கை காவல்துறை அதிகாரியான அர்ஜுன் விசாரிக்கிறார். அந்த விசாரணையில் எழுத்தாளரின் நண்பரான ரியல் எஸ்டேட் அதிபர் ராம்குமார் கணேசனைப் பற்றி தெரிய வருகிறது. அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் அவரும் கொல்லப்படுகிறார்.
அதற்கடுத்து அவரது அபார்ட்மெண்டிலேயே அடுத்து இரண்டு கொலைகள் நடைபெறுகின்றன. இதன் தீவிர விசாரணையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் பக்கம் சந்தேகம் திரும்புகிறது.
இந்த சந்தேகத்தை அர்ஜுன் உறுதி செய்தாரா ? ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கொலைகள் செய்தாரா ? இதன் பின்னணி என்ன என்பதை மீதிக்கதை விவரிக்கிறது.
போலீஸ் வேடம் என்றால் அர்ஜுனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. தனக்கே உரித்தான வசன உச்சரிப்பும் உடல்மொழியும் கொண்டு அர்ஜுன் கவர்ந்திழுக்கிறார் என்றாலும், அவரது ஆக்ஷன் திறனுக்கு இப்படத்தில் போதிய தீனி இல்லை என்பதே உண்மை.
வழக்கம் போல எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் குறிப்பாக ஆக்ஷன காட்சிகளில் கவனம் பெற்று இருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்திருக்கும் அர்ப்பணிப்பைப் பாராட்டலாம்.
கீதாவாக வரும் அபிராமி வெங்கடாசலம் சிறார் நடிகர் அனிகா ஆகியோரின் பங்களிப்பும் மெச்சத்தக்க அளவில் இருக்கின்றன. பிரவீன் ராஜா, லோகு. ராம்குமார், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு..
இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன். பின்னணி இசை திரைக்கதை மற்றும் காட்சிகளுக்கு பரபரப்பு சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு, பார்வையாளர்களிடமும் பதற்றத்தை தொற்றிக் கொள்ள செய்பவர், லிப்ட்டில் நடக்கும் சண்டைக்காட்சியை அட்டகாசமாக படமாக்கி பாராட்டு பெறுகிறார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து, விறுவிறுப்பான கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இயக்கியிருக்கும் தினேஷ் லட்சுமணன் படம் மூலம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால் காட்சிகள் அனைத்தும். பழங்கால படங்களை நினைவூட்டும் பாணியிலேயே எழுதப்பட்டிருப்பது அயர்ச்சியை தருகிறது..
.









