
வாத்தியார் என்றாலே அது தமிழகத்தைப் பொறுத்தவரை மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான். அவரை மையப்படுத்திய ஒரு கருவை எடுத்துக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருப்பதால் வா வாத்தியார் என டைட்டில் வைத்திருக்கிறார்கள். வாத்தியாருக்கு ஏற்ற நியாயம் செய்திருக்கிறார்களா ? பார்க்கலாம்.
எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண் ஒருநாள் திரையரங்கில் படம் பார்க்கும்போது எம்ஜிஆரின் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைகிறார். ஆனால் அதே சமயம் அவருக்கு பேரன் பிறந்திருக்கிறான் என்கிற செய்தி வந்ததும் மறைந்த எம்ஜிஆரே தனக்கு பேரனாக பிறந்திருக்கிறார் என மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்.
எம்ஜிஆர் போல நல்ல குணாதிசயங்களுடன் அவரை வளர்க்க முயற்சிக்கிறார். ஆனால் அதற்கு முற்றிலும் வித்தியாசமாக நம்பியார் குணங்களுடன் வளரும் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும் மாறி பணத்தாசையால் பல மோசமான காரியங்களையும் செய்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்குள் எம்ஜிஆரின் ஆவி புகுந்து கொள்கிறது.
அதன் பிறகு அவருடைய குணாதிசயத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அது கார்த்திக்கு நன்மையை ஏற்படுத்தியதா ? இல்லை அவரை சிக்கலில் மாட்டி விட்டதா ? எம்ஜிஆர் ஆக மாறிய பிறகு கார்த்தி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பது மீதி கதை.
ஆரம்பத்தில் கெட்ட போலீசாக வழக்கம் போல லந்து பண்ணும் கதாபாத்திரத்தை கார்த்தி அசால்டாக செய்தாலும் இதை பலமுறை நாம் பார்த்து விட்டோமே என்கிற சலிப்பு கொஞ்சம் ஏற்படவே செய்கிறது. அதை தொடர்ந்து அவருக்குள் எம்ஜிஆரின் ஆவி புகுந்த பிறகு அவரது கெட்டப் பிடிக்கிறதோ இல்லையோ அவர் செய்யும் செயல்கள் ஓரளவுக்கு அப்பாடா என்று சொல்ல வைக்கிறது. இருந்தாலும் கார்த்தி என்ன தைரியத்தில் இருந்த படத்தை தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை.
தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார் கிரித்தி ஷெட்டி. பாடல் காட்சிகளில் கொஞ்சம் கவனம் ஈர்ப்பவர், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் நாம் எதிர்பாராத வகையில் நமக்கு அதிர்ச்சி ஊட்டுகிறார். அது படத்தைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
எம்ஜிஆரின் ரசிகராக வரும் ராஜ்கிரண் ஓரளவுக்கு தீவிர எம்ஜிஆர் ரசிகராகவே மாறி இருக்கிறார். அதே சமயம் சத்யராஜ் வில்லனாக நடித்திருப்பதால் அவரிடம் நிறைய எதிர்பார்த்தாலும் பெரிய அளவில் நம்மை ஏமாற்றவே செய்கிறார். அதேபோல சில்பா மஞ்சுநாத், ரமேஷ் திலக், அரசியல்வாதியாக வரும் நிழல்கள் ரவி, யார் கண்ணன் உள்ளிட்ட பலரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
போகிற போக்கில் அப்படியே தூத்துக்குடி சம்பவத்தையும் லைட்டாக டச் பண்ணி இருக்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி. அதேசமயம் எம்ஜிஆரை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியவர்கள் இன்னும் கதை உருவாக்கத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே போல கார்த்தியின் கதாபாத்திரத்தை எம்ஜிஆர் போல மாற்றும் போதும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.
சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் பாடல்கள் ஓகே என்றாலும் அவ்வப்போது வரும் எம்ஜிஆர் பாடல்கள் நம்மை குஷிப்படுத்தி நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.
ஒரு பக்கம் இந்த படம் பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு தாமதமானது மைனஸா அல்லது இந்த கதையை சரியான திரைக்கதையில் கோர்க்காதது மைனஸா என்பதை படம் பார்க்கும் ரசிகர்கள் பார்வைக்கு விட்டு விடலாம்.









