Reviews

தலைவர் தம்பி தலைமையில் ; விமர்சனம்


கிராமத்தில் இளவரசு, தம்பி ராமையா இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகள் என்றாலும் எதிரிகள். இந்த கிராமத்து நல்லது கெட்டதுகளை கவனித்து தலைவர் போட்டிக்கு தயாராகி வருகிறார் ஜீவா. அவருக்கு எதிராக களம் இறங்க காய் நகர்த்துகிறார் லப்பர் பந்து மூர்த்தி. இந்த நிலையில் இளவரசுவின் மகள் திருமணம் அவரது வீட்டின் முன்பாகவே நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தரப்படலாக நடக்கிறது.

திடீரென எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டில் தம்பி ராமையாவின் தந்தை மரணம் அடைகிறார். மறுநாள் காலையில் இளவரசியின் மகள் திருமணம் நடக்க இருக்கும் அதே முகூர்த்தத்தில் தனது தந்தையை தேரில் சாவு ஊர்வலமாக மயானத்திற்கு அழைத்துச் செல்ல நேரம் குறிக்கிறார் தம்பி ராமையா.

இவர்கள் இருவரையும் கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் ஜீவா. ஆனால் எதிர் தரப்பில் இருக்கும் லப்பர் பந்து மூர்த்தி இதனை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார். இரு தரப்புக்கும் பிரச்சனை பற்றிக் கொள்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது ? ஜீவா இந்த விஷயத்தை எப்படி கையாண்டார் என்பது மீதி கதை.

மலையாள படங்கள் எல்லாம் எப்படி எடுக்கிறார்கள், இங்கே ஏன் தமிழில் அதுபோல எடுப்பதில்லை என்கிற மனக்குறை பலருக்கு உண்டு. அந்த குறையை தீர்க்கும் விதமாக எடுக்கப்பட்ட ஒரு படம் தான் இது. ஆனாலும் இதை ஒரு மலையாள இயக்குனர் தான் இயக்கி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை கலகலவென அதே சமயம் இறுதிவரை என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு குறையாமல் அழகாக நகர்கிறது.

ஜீவாவுக்கு காதல், டூயட், கதாநாயகி என எதுவும் இல்லாத, ஊருக்கு உழைப்பவன் கதாபாத்திரம்.. ஒரே வெள்ளை வேட்டி சட்டை தான் படம் முழுக்க அவரது காஸ்டியூம். நடிப்பிலும் நல்ல எதார்த்தம் காட்டி இருக்கிறார் ஜீவா. இப்படி ஒரு அருமையான கதையை தேர்ந்தெடுத்து மீண்டும் தனது திரையுலக பயணத்தை சூடு பிடிக்க வைத்திருக்கிறார் ஜீவா.

கிராமத்து ஈகோ பிடித்த மனிதர்களாக இளவரசும் தம்பி ராமையாவும்.. திருமணம், சாவு வீடு இதில் யார் விட்டுக் கொடுத்துப் போவது என்கிற ஈகோ எந்த அளவுக்கு கொண்டு செல்லும் என காட்சிக்கு காட்சி நம்மை பதட்டத்திலேயே வைத்திருக்கிறார்கள்.

லப்பர் பந்து மூர்த்திக்கு இந்த படத்தில் நரித்தனமான வேலைகள் செய்யும் லோக்கல் அரசியல்வாதி கதாபாத்திரம். காமெடி கலந்து ஜமாய்த்துள்ளார் கதாநாயகியாக சௌமியா கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் அழகிலும் நடிப்பிலும் நம்மை ஆரம்பத்திலிருந்து வசீகரிக்கிறார். அவருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை யாருப்பா இவர் என ஆரம்பத்தில் கேட்க வைத்தாலும் காட்சிகள் போக போக நம் மனதிற்குள் இடம் பிடித்து விடுகிறார்.

ஒரு தவறான செய்தி மக்கள் மத்தியில் எப்படி ஒரு வதந்தியாக பரவி குடும்பங்களுக்குள் குழப்பங்களை உண்டு பண்ணுகிறது என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் நித்திஷ் சகாதேவ். இந்த பொங்கல் பண்டிகையில் மக்கள் குடும்பத்தோடு தாராளமாக கட்டாயமாக போய் பார்க்க வேண்டிய படம் இது. அந்த அளவிற்கு உங்களை ரசித்து சிரிக்க வைத்து கலகலப்பாக வெளியே அனுப்புவார்கள் என்பது உத்தரவாதம்.