
ஏற்கனவே மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமாக இந்த படம் வெளியாகி உள்ளது. அதே சமயம் இதை வரலாற்று பின்னணியில் கொடுத்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி.
படத்தின் கதை டில்லியை துக்ளக் வம்சம் ஆண்ட காலத்தில் இருந்து துவங்குகிறது. அந்த சமயத்தில் திருவண்ணாமலையில் மூன்றாம் வல்லாள மகாராஜாவாக இருக்கும் நட்டியிடம் ஒரு குறுநில மன்னர் போல இணைந்து பணியாற்றுகிறார் வீரசிம்ம காடவராயரான ரிச்சர்ட் ரிஷி. ஒரு கட்டத்தில் மகாராஜா நட்டி போரில் தோற்றுப் போய் உயிரை விடும் நிலையில் தனது சேனாதிபதியான ரிச்சரிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு மரணத்தை தழுவுகிறார்.
அதன் பிறகு ரிச்சர்ட் ரிஷிக்கு ஆட்சியாளர்களால் என்ன விதமான பாதிப்பு ஏற்படுகிறது, நட்டி அவருக்கு வழங்கிய பொறுப்புகள் என்ன, இதற்கு இடையே அவரை தவறானவர் என நினைத்து அவர் மனைவி திரௌபதி செய்யும் சதி வலை இவையெல்லாம் மீதி கதை என்னவென்று சொல்லும்.
வரலாற்று கதை என்பதால் அந்த வீரசிம்ம காடவராயர் கதாபாத்திரத்தில் தன்னை பொருத்திக் கொள்வதற்காக நடிகர் ரிச்சர்ட் ரிஷி எப்படிப்பட்ட உழைப்பை, அர்ப்பணிப்பை கொடுத்திருக்கிறார் என்பது அவரது தோற்றத்தை பார்க்கும் போதே தெரிகிறது. அதற்கான வசன உச்சரிப்பு, உடல் மொழியையும் சரியாக கொடுத்திருக்கிறார்.
படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரக்ஷனா இந்துசூடன். இவருக்கும் மகாராணியாக கம்பீரமான தோற்றம். நடிக்கவும் நிறைய வாய்ப்பு. ஒரு வீர பெண்மணியாக கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
மகாராஜா கதாபாத்திரத்தில் நட்டியும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதே சமயம் அவர் 80 வயதானவர் என்பதற்காக அவருக்கு போடப்பட்டிருக்கும் மேக்கப் கொஞ்சம் மிகையாக தெரிகிறது.
முகமது பின் துக்ளக்காக நடித்திருக்கும் சிராக் ஜானி, ஜியாசுதீன் தம்காணியாக நடித்திருக்கும் தினேஷ் லம்பா.. இவர்கள் கதாபாத்திரம் பணத்தை கொஞ்சம் விறுவிறுப்பாக நகர்த்த உதவுகிறது. ஒய்ஜி மகேந்திரன், சரவண சுப்பையா, வேலராமமூர்த்தி, பரணி ஆகியோருக்கும் இந்த படத்தில் பொருத்தமான கதாபாத்திரங்களை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.
படத்தின் முக்கிய பலமே ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் தான். வரலாற்றுக் காட்சிகளை அவ்வளவு நேர்த்தியாக படம் ஆக்கி இருக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல்களும் ஓரளவு படத்திற்கு வலு சேர்க்கின்றன. இதற்கு முந்தைய கதைகளில் ஜாதி, ஆணவக் கொலை ஆகியவற்றை மையப்படுத்தி படங்களை இயக்கி வந்த மோகன் ஜி, இந்த படத்தில் நமது இந்துக்களின் வரலாறு எப்படி நசுக்கப்பட்டது, இந்துக்கள் எப்படி ஒடுக்கப்பட்டனர் என்பது குறித்து எல்லாம் சற்றே விளக்கமாக காட்சிப்படுத்தியுள்ளார். நிச்சயமாக இந்த படம் ஒரு வரலாற்று பதிவு என்று சொல்லலாம்.









