Tamizh Review

மாயபிம்பம் ; விமர்சனம்


மருத்துவக் கல்லூரி மாணவரான ஆகாஷ் மருத்துவமனையில் பணி புரியும் செவிலியராக ஜானகியை பார்த்த முதல் பார்வையிலேயே ஈர்க்கப்படுகிறார். ஒரு விபத்தில் இவர்கள் சந்திப்பு இன்னும் நெருக்கமாக பழகுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் நண்பர்களின் தூண்டுதலால் ஜானகி குறித்த தவறான ஒரு முடிவை ஆகாஷ் எடுக்கிறார். அது அவரது வாழ்க்கையை எந்த அளவுக்கு திசை திருப்பி போடுகிறது என்பதுதான் இந்த மாயபிம்பம் படத்தின் கதை.

பொதுவாகவே இன்றைய இளைஞர்களுக்குள் ஒளிந்து கிடந்து, வெளிப்பட துடிக்கும் காமம், தவறான புரிதல் கொண்ட நண்பர்களால் எப்படி ஒரு இளைஞனை அது திசை மாற்றி விடுகிறது என்பதை தனது இயல்பான நடிப்பு உடல் மொழி மூலம் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகனாக நடித்திருக்கும் ஆகாஷ்.

அவர் மட்டுமல்ல கதையின் நாயகியாக நடித்திருக்கும் சுமதியும் கூட ஒரு பக்கத்து வீட்டுப் பெண் போல அந்த கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோவால் அவருக்கு ஏற்படும் சங்கடம் என்னவென்று பின்னால் நமக்குத் தெரிய வரும் போது உண்மையிலேயே நம்மால் அதிர்ச்சியை அடக்க முடியவில்லை.

நாயகனின் நண்பர்களாக நடிக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் உள்ளிட்டோர் புதுமுகங்கள் என்றாலும் கூட இந்த கதைக்கு அழகாக தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தின் இயல்பு தன்மை மாறாமல் தனது ஒளிப்பதிவில் மேம்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எட்வின்.

அவர் மட்டுமல்ல இசையமைப்பாளர் நந்தாவும் பாடல்கள் மூலம் கதாபாத்திரங்களின் உணர்வுகளை நமக்கு கடத்தி இருப்பதுடன் கதையுடன் இணைந்து நம்மை பயணிக்க வைக்கும் பின்னணி இசையையும் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.

காதல் கதை தான் என்றாலும் கூட அதில் எதிர்பாராத விதமாக ஏற்படும் ஒரு சிக்கல் இந்த படத்தை ஒரு விறுவிறுப்பான திரில்லர் போல மாற்றி இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் கே.ஜே சுரேந்தரின் இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த மாயபிம்பம் படம் ரசிகர்கள் பார்த்து ரசிக்க கூடிய ஒரு படம் தான்..