
தமிழ்நாட்டில் 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பெரும் சுரங்க காண்ட்ராக்ட்டை கைப்பற்ற கார்ப்பரேட் வில்லனான ஜான் கொக்கன் திட்டமிடுகிறார். அதை அவருக்கு சாதகமாக்க ஒரு ஊழல் அமைச்சர் 1,000 கோடி ரூபாய் லஞ்சம் கேட்க, அந்தப் பெருந்தொகையைத் தனது ஆட்களான பவன் மற்றும் அருண் சிதம்பரம் மூலமாகக் கொண்டு சேர்க்க வில்லன் முயல்கிறார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக இந்த பெரும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்கு நடுவே ஒரு எளிய நடுத்தரக் குடும்பம் சிக்கிக் கொள்கிறது. தலைமை ஆசிரியரான அர்ஜுன், அவரது மனைவி அபிராமி மற்றும் மகள் பிரீத்தி முகுந்தன் ஆகியோரைக் கொண்ட அந்தக் குடும்பத்தை எளிய மனிதர்கள் என்று நினைத்து வில்லன் கூட்டம் அழிக்க முயல்கிறது.
ஆனால், அந்த எளிய குடும்பமே கராத்தேவில் தேர்ந்த மாஸ்டர்கள் என்பது அவர்களுக்குத் தெரிய வருவதில்லை. அங்கிருந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ள அந்தக் குடும்பமே களமிறங்கிப் போராடும் ஒரு அதிரடிப் போராட்டமாக கதை விறுவிறுப்படைகிறது.
ஆக்சன் கிங் அர்ஜுன் தனது வழக்கமான அதிரடி முத்திரையோடு, ஒரு பாசமுள்ள தந்தையாகவும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கதையின் மிகப்பெரிய பலமே, ஹீரோ மட்டுமே தனியாக நின்று குடும்பத்தைக் காப்பாற்றப் போராடாமல், அவருக்கு இணையாக மனைவியும் மகளும் களம் இறங்கி சண்டையிடுவதுதான்.
அதுவரை கிளாமர் மற்றும் துள்ளலான கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரீத்தி முகுந்தன், இதில் ஒரு அடக்கமான நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணாக வந்து, பின்னர் ஆக்ரோஷமான சண்டைக்காரியாக மாறி கைதட்டல் பெறுகிறார். தன்னைத் துன்புறுத்தும் ஐடி மேலாளரை காரில் வைத்தே அடித்து துவம்சம் செய்யும் காட்சியிலும், வீட்டிற்குள் புகுந்த ரவுடிகளைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் இடத்திலும் அவர் மிளிர்கிறார்.
இடைவேளைக்குப் பிறகு அர்ஜுனுடன் இணைந்து அவர் செய்யும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் ஈர்க்கின்றன. அதேபோல், ஆரம்பத்தில் பாசமிகு தாயாக வரும் அபிராமியும், பின்பாதியில் மார்ஷியல் ஆர்ட்ஸ் வித்தைகளைக் காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். இவர்களின் இந்த அதிரடி மாற்றம் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக, ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கு ஒரு புதிய எனர்ஜியைக் கொடுத்துள்ளது. படத்தில் வழக்கமான பாடல்கள் இல்லை என்றாலும், சண்டைக்காட்சிகளுக்கு அவரது இசை பெரும் பலம் சேர்த்துள்ளது, சில இடங்களில் சத்தம் சற்று அதிகமாகத் தெரிந்தாலும் ரசிக்க வைக்கிறது.
பீனிக்ஸ் பிரபுவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு ஆகியவை சண்டைக்காட்சிகளை மிகவும் பிரம்மாண்டமாகவும் நேர்த்தியாகவும் காட்டியுள்ளன. இருப்பினும், படத்தின் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க சண்டைக்காட்சிகளாகவே நகர்வதால் ஒரு கட்டத்தில் சற்று அயர்வை ஏற்படுத்துகிறது.
நகரின் நடுவே இத்தனை கொலைகளும் சண்டைகளும் நடக்கும்போது காவல்துறை எங்கே போனது என்ற லாஜிக் மீறல்களும், அரசியல் மற்றும் சுரங்கத் தொழில் சார்ந்த துணைக்கதைகள் இழுவையாக இருப்பதும் பலவீனமாகத் தோன்றுகின்றன. க்ளைமாக்ஸ் காட்சியும் சற்று அவசரமாக முடிக்கப்பட்டது போன்ற உணர்வைத் தருகிறது.
ஆனாலும், சில லாஜிக் குறைகளையும் தாண்டி இந்தப் படம் ஒரு மிக முக்கியமான சமூகக் கருத்தைச் சொல்கிறது. நம் வீட்டுப் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் கலைகளைக் கற்றுக் கொண்டு, சுயசார்புடனும் தைரியத்துடனும் இருக்க வேண்டும் என்பதையும், அச்சுறுத்தல்களை யாரையும் நம்பாமல் தாங்களாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
குடும்பப் பாசத்தையும் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆக்ஷனையும் புதுமையான முறையில் கலந்து கொடுத்துள்ளதால், குடும்பங்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் தியேட்டரில் சென்று பார்க்கக்கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘பிளாஸ்ட்’ அமைந்துள்ளது









