
ஒரு மிகப்பெரிய அபார்ட்மெண்டில் 99 நம்பர் வீட்டிற்கு ரக்ஷிதா மகாலட்சுமி தனது காதல் கணவர் சபரியுடன் குடி வருகிறார். அவர்களுக்கு எதிர்த்த அபார்ட்மெண்டில் உள்ள 66 எண்ணுள்ள வீட்டில் இருக்கும் ஸ்வேதா ரக்ஷிதாவுடன் பழக்கம் ஆகிறார். ரக்ஷிதாவும் அவ்வப்போது ஸ்வேதாவின் வீட்டிற்கு சென்று வருகிறார். இன்னொரு பக்கம் ரக்ஷிதாவின் காதல் கணவர் தன் மனைவியை தந்திரமாக கொல்வதற்கு அவ்வப்போது முயற்சிக்கிறார். இது பற்றி அறியாத ரக்ஷிதாவும் அவற்றிலிருந்து தப்பிக்கிறார்.
ஒரு கட்டத்தில் அந்த 66 ஆம் வீட்டில் குடியிருக்கும் ஸ்வேதா எப்போதோ இறந்துவிட்டார் என்றும் ரக்ஷிதாவின் கணவரே அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்கிற உண்மையையும் அந்த அப்பார்ட்மெண்ட்டின் செயலாளர் இருக்கும் எம்எஸ் மூர்த்தி மூலமாக ரக்ஷிதாவுக்கு தெரிய வருகிறது.
இறந்து போன ஸ்வேதா தனக்கு மட்டும் எப்படி தெரிந்தார் ? தன்னுடைய காதல் கணவனே தன்னை ஏன் கொலை செய்ய வேண்டும் ? இந்த இரண்டு சம்பவங்களின் பின்னணியில் தன் கணவனும் மற்றும் அவருடனும் யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றிய விபரங்கள் எல்லாம் ரக்ஷிதாவுக்கு தெரிய வருகிறது. அவர்களுக்கான தண்டனையை யார் கொடுக்கிறார்கள் ? என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
படத்தின் நாயகி ரக்ஷிதா மகாலட்சுமி தான் முழு கதையையும் தாங்கிப் பிடித்தபடி நடத்தி செல்கிறார். கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் ரசிகர்களை கவனிக்கிறார். அவருக்கும் காதல் கணவரான சபரிக்கும் இன்னும் நெருக்கமான காட்சிகளை வைத்திருந்தால் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பாக இருந்திருக்கும்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா, அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் நல்ல மனதுக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார்.
படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குனருமான எம்.எஸ். மூர்த்தி நடித்திருக்கிறார். அமைதியான, அதேசமயம் ஆழமான அதிகம் பேசாத நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாமே இந்த சமூகத்திற்கு தேவையான ஏதோ ஒரு செய்தியை சொல்லும் விதமாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பது சிறப்பு.
சபரி எதோ பூனையிடம் மாட்டிக்கொண்ட எலியின் உணர்வை வெளிப்படுத்துவது போலவே தனது கதாபாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார். ரோகிந்த் மற்றும் பவன் குமார் போன்றவர்களும் தங்களது வில்லத்தனத்தை மிகச்சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இடையிடையே சிங்கம்புலி, சாம்ஸ், முல்லை, கோதண்டம் ஆகியோரும் நகைச்சுவை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஓரளவுக்கு எடுபடவும் செய்கிறது.
ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜா அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெறும் ஹாரர் காட்சிகளை நம்மை பயமுறுத்தாதபடி படமாக்கி இருக்கிறார். எம்.எஸ் மூர்த்தி பக்குவமான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார். ஒரு அபார்ட்மெண்ட், அதற்குள் நடக்கும் சம்பவங்கள், அதில் கொஞ்சம் ஹாரர் அதன்பிறகு ஒரு மெசேஜ் என ஒரு சிறிய அளவிலான கமர்சியல் கதையை கொடுக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ் மூர்த்தி. தாராளமாக ஒரு தடவை பார்த்து ரசிக்கலாம்.









