Reviews

வடம் ; விமர்சனம்


ஊரின் முக்கியஸ்தரான ஆடுகளம் நரேனின் மகன் விமல். ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார். ஜாமீனில் விடுதலையாகி வெளிவரும் இவரை கொல்லவும் இரு தரப்பினர் முயற்சி செய்கின்றனர். இன்னொரு பக்கம் கணவனை இழந்த அக்காவுடன் வசித்து வரும் தங்கை சனக்ஷா ஸ்ரீ தன்னுடைய காளையை ஜல்லிக்கட்டுக்காக பயிற்சி தரும்படி விமலிடம் கோரிக்கை வைக்கிறார்.

இந்த பயிற்சியின் போது இருவருக்குமே காதல் மலர்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக சனக்ஷா ஸ்ரீ பயிற்சி கொடுத்த காளையை வைத்து விமலை குத்த வைக்கிறார்.. ஏன் ? எதற்கு ? இதன் பின்னணியில் என்ன நடந்தது ? விமல் யாரைக் கொன்றார் விமலை கொள்ள துரத்தும் மற்றொரு கும்பல் யார் என்பதற்கு மீதிக்கதை விட சொல்கிறது.

வழக்கமான கிராமத்து நாயகன் கதாபாத்திரம் என்பதால் அசால்டாக செய்துவிட்டு போகிறார் விமல். அந்த கிராமத்து மண்ணிற்கேற்ற உடல் மொழி, வசனம், அது மட்டுமில்லாமல் அதிரடி ஆக்சன் காட்சிகள் என ஒரு மினிமம் கமர்சியல் படத்திற்கான எல்லா வேலைகளையும் மிக சரியாக செய்து கொடுத்து இருக்கிறார் விமல்,

கதாநாயகி சனக்ஷா ஸ்ரீ கதைக்கு ஏற்ற அழகான நாயகியே. வரும் காட்சிகளில் எல்லாம் நம் கவனத்தை ஈர்க்கிறார். இடைவேளையில் திடீரென ஒரு அதிர்ச்சியையும் நமக்கு கொடுக்கிறார். இன்னும் அவருக்கு அதிக காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ். இவர் நல்லவரா கெட்டவரா என்று தீர்மானிக்க முடியாதபடி அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு..

அவருக்கு உதவியாக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் முனீஸ் காந்த் காமெடியில் இருந்து குணச்சித்திரம் பக்கம் கவனத்தை திருப்பி அதிலும் சூப்பராக ஸ்கோர் செய்து இருக்கிறார்.

சனக்ஷாவின் அக்காவாக நடித்திருப்பவரும் தன் தங்கை பிரமாதப்படுத்தி இருக்கிறார். விமலின் அப்பாவாக ஆடுகளம் நரேன், அம்மாவாக இந்துமதி, அத்தையாக தீபா சங்கர் உறவினராக நடித்திருக்கும் பால சரவணன் உள்ளிட்ட அனைவருமே கிராமத்து கதையின் எதார்த்தத்தை மீறாமல் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கின்றனர்.

வித்தியாசமான மஞ்சுவிரட்டு களத்தை தனது அழகான ஒளிப்பதிவால் கண்முன் நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ் குமார். அந்த மாடுபிடி காட்சிகள் எல்லாம் மிகவும் பரபரப்பாக படமாக்கப்பட்டு இருக்கின்றன. டி இமானும் இந்த கிராமத்து கமர்சியல் படத்திற்கு ஏற்ப தனது இசையை கொடுத்திருக்கிறார்.

மஞ்சுவிரட்டு போட்டி, அதன் பின்னணியில் உள்ள யார் பெரியவர் என்கிற மரியாதைக்கான போட்டி. இவற்றால் ஏற்படும் யுத்தம். அதனால் ஏற்படும் உயிர்பலி என வழக்கமான ஒரு கிராமத்து கதைக்கான களம். என்றாலும் ஏற்கனவே ஒன்று இரண்டு படங்களில் நாம் இதை பார்த்து இருக்கிறோம். என்பதும் அவ்வப்போது நம் நினைவுக்கு வந்து போகிறது. இருந்தாலும் படம் முழுவதும் எந்த தொய்வும் இல்லாமல், காரணம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புடனும் ஒரு சில திருப்பங்களுடனும் இந்த படத்தை கச்சிதமாக நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கேந்திரன்.