
ஒரு கொரியர் கம்பெனியில் ஜிவி பிரகாஷ் வேலை பார்க்கிறார். அவரது முதலாளி கொரியர் என்கிற பேரில் போதை பொருள் கடத்த, அது தெரியாமல் கொண்டு செல்லும் ஜிவி பிரகாஷிடம் இருந்து ஒரு பார்சல் திருடு போகிறது. அதை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும், இல்லை என்றால் அதற்கான பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி அவரது காதலியும் கர்ப்பிணிமான தேஜு அஸ்வினியை கடத்தி வைக்கிறார் முதலாளி முத்துக்குமார்,
இன்னொரு பக்கம் பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி பிந்து மாதவி. இவர்களது மகள் விரும்புகிறாள் என்பதற்காக ஊட்டிக்கு அழைத்து செல்லும் வழியில் திடீரென சிறுமி கடத்தப்படுகிறாள். இதற்கிடையே பிந்து மாதவியை பணம் கேட்டு மிரட்டும் அவரது கள்ளக்காதலன் தான் குழந்தையை கடத்தி இருப்பாரோ என்கிற சந்தேகம் பிந்து மாதவிக்கு ஏற்படுகிறது.
குழந்தை கடத்தலில் பின்னணி என்ன ? ஜி வி பிரகாஷ் தனது மனைவியை மீட்டாரா ? இந்த இரண்டு கடதல்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா ? என்பது படத்தின் மீதி கதை.
கொரியர் பாய் மணி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் ஜி வி பிரகாஷ். சட்டென்று தடுமாறுவது, எரிச்சலாவது என்று அப்பாவித்தனமான தன்னுடைய நடிப்பை யதார்த்தமான உடல் மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கோபத்துக்கும் நிதானத்துக்கும் இடையே சிக்கிய மனிதர் போல் நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் நடித்த பாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது. அவரது மனைவியாக பிந்து மாதவி, பயம், தவிப்பு, பிள்ளைப் பாசம், குற்ற உணர்ச்சி என்ற பலதரப்பட்ட உணர்ச்சிகளைக் காட்டி நடித்துள்ளார். காதலி தேஜு அஸ்வினிக்கு அதிக ஸ்கோப் இல்லையெனினும், தேவையான அளவுக்கு சரியாக நடித்திருக்கிறார்.
வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கும் லிங்கா, நடிப்பில் மிளிர்கிறார். சாஜி, ரெடின் கிங்ஸ்லி, முத்துகுமார், ரமேஷ் திலக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் குறையின்றி நடித்திருக்கிறார்கள்.
த்ரில்லர் கதைக்கேற்ற பின்னணி இசையை கொடுத்துள்ளார் சாம் சி.எஸ். குறிப்பாக திருநங்கைகளுக்கான அந்த பாடல் கவனிக்க வைக்கிறது. அதேபோல. ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் உழைப்பு படம் முழுக்க தெரிகிறது.
குழந்தை கடத்தல் பின்னணியில் இரண்டு வெவ்வேறு பிளாக்மெயில் சம்பவங்களுக்கு வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ள இயக்குனர் விறுவிறுப்பாக மட்டும் இன்றி யூகிக்க முடியாதபடி படத்தை நகர்த்தி செல்கிறார். முதல் பாதி க்ரைம் த்ரில்லராக விறுவிறுப்பாகச் செல்கிறது. இரண்டாம் பாதியில் வரிசையாக முடிச்சிடும் திருப்பங்கள் நம்மைக் கிறுகிறுக்க வைக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உண்டான சிக்கல்கள், சுயநலங்கள், பேராசைகள், துரோகங்கள் ஆகியவற்றை சமரசம் செய்யாமல் நேர்த்தியாக கொடுத்திருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.









