Reviews

BP 180 ; விமர்சனம்


வடசென்னையில் மிகப்பெரிய அதிகார புள்ளியாக இருப்பவர் பாக்கியராஜ். அவர் மகள் ஒரு விபத்தில் இறந்துவிட, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. உண்மையை வெளியே தெரியாமல் மறைப்பதற்காக அரசு மருத்துவரான தான்யா ரவிச்சந்திரனிடம் தனது மகளின் உடலை போஸ்ட் மாடம் செய்யாமல் தரும்படி கேட்கிறார் பாக்கியராஜ்.

ஆனால் அவர் மறுத்து விட, பாக்கியராஜ் லோக்கல் ரவுடியான டேனியல் பாலாஜியின் உதவியை நாடுகிறார். அவர் தான்யாவை அழைத்து அவருக்கு மிரட்டல் விடுகிறார். இதைத் தொடர்ந்து தான்யா காவல்துறை அதிகாரியிடம் புகார் கொடுக்க அந்த காவல்துறை அதிகாரியையும் போட்டு தள்ளுகிறார் டேனியல் பாலாஜி.

இப்படி தான்யாவை மிரட்டுவதற்காக அவருக்கு ஆதரவான நபர்களை கொல்கிறார். இந்த சிக்கலில் இருந்து தான்யா எப்படி மீள்கிறார் ? டேனியல் பாலாஜியிடமிருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா ? பாக்யராஜ் மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அவர் ஒப்படைத்தாரா என்பது மீதிக்கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன், எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் நடித்து இப்படியொரு துணிச்சலான டாக்டர் இருக்க மாட்டாரா’ என்று ஏங்க வைக்கிறார்.

காசிமேடு ரவுடி அர்னால்டு கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, செய்யும் அடாவடிகள் ஓவராக இருப்பது தோன்றினாலும், தனது நடிப்பில் அந்த கேரக்டரை ரசிகனுக்கு மிக நெருக்கமாக கொண்டு வந்து விடுகிறார். தான் பெரிய ஆள் என்கிற மமதையில் இருக்கும் அவர் ஒரு பெண்ணிடம் அவமானப்படும் நேரத்தில் வெளிப்படுத்தும் நடிப்பு அவருக்குப் புகழ் சேர்க்கிறது.

தனது மகளின் உடலைக் கண்டதும் பாக்யராஜ் கதறி அழும் காட்சியில் நம்மையும் சேர்த்து கண்கலங்க வைத்துவிட்டார். முன்னாள் எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் அருள்தாஸ், காவல்துறை ஆணையராக நடித்திருக்கும் தமிழ், சமூக ஆர்வலராக நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, சகோதரராக நடித்திருக்கும் ரங்கா, தோழியாக நடித்திருக்கும் நயனா ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஜிப்ரானின் பின்னணி ஸ்கோர் கதையை மிகைப்படுத்தாமல் பதற்றத்தை அதிகரிக்கிறது. ராமலிங்கம் ஒளிப்பதிவு கதையின் கடுமையான மற்றும் தீவிரமான மனநிலையைப் படம்பிடிக்கிறது.

புதிய கதை களத்தில் விறுவிறுப்பான திரைக்கதை காட்சிகளோடு நாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய ஒரு படத்தை இயக்குனர் ஜெ.பி, ஆனால் திரைக்கதையிலும், கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் தடுமாறி இருக்கிறார் என்றே சொல்லலாம்.. முதல் பாதியில் தேவையற்ற காட்சிகள் கணிசமாக காணப்படுகின்றன. இருந்தாலும், அந்த கிளைமாக்ஸ் காட்சி இந்த குறைகளை மறக்கும் வகையில் அழகாக அமைந்துள்ளது.