Reviews

வெள்ள குதிர ; விமர்சனம்


பேராசை காரணமாக நகரத்தில் ஒரு சம்பவம் செய்துவிட்டு அதிலிருந்து தப்பித்து மறைந்து வாழ சாலை வசதி கூட இல்லாத ஒரு மலை கிராமத்திற்கு தனது மனைவி அபிராமி போஸ் மற்றும் மகனுடன் சென்று தஞ்சம் அடைகிறார் ஹரிஷ் ஓரி. அந்த கிராமத்தில் மூட்டை தூக்கி பிழைக்கும் அவருக்கு அங்கே மூலிகை ரசம் என்கிற பெயரில் காய்ச்சப்படும் சாராயம் பற்றி தெரிய வர அதை வெளியே விற்று காசு பார்க்க துவங்குகிறார்.

இன்னொரு பக்கம் அந்த மலை கிராமத்து மக்களை எப்படியாவது வெளியேற்றி அங்கே சுற்றுலா தளமாக்க முயற்சிக்கிறார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உதிரி விஜயகுமார். இவரது இந்த செயலை எதிர்த்து குரல் கொடுக்கும் அபிராமி போஸ் தனது கணவனின் பேராசைக்கும் மோசடி செயலுக்கும் கூட எதிராக கொடி பிடிக்கிறார். இதில் நியாயம் வென்றதா என்பது மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். தான் திருந்தி விட்டதாக மனைவியிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு மறுபடியும் தவறான ரூட்டை தேர்ந்தெடுக்கும் இடத்தில் குற்ற உணர்வு சிறிதும் இல்லாத அந்த நடிப்பும் உடல் மொழியும் சிறப்பு..

மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ் துணிச்சல்கார கிராமத்துப் பெண்களின் பிரதிநிதியாக இருக்கிறார். தனது யதார்த்த நடிப்பால் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார்.

ஜீவிதா வெங்கடேசன், உதிரி விஜயகுமார், ரெஜின் ரோஸ், மெலடி டார்கஸ், ஜெயலட்சுமி, அறிவு உள்பட அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.

பரத் ஆசீவகனின் இசையில் பாடல்கள் தெளிவாகவும், உணர்வோடு சேர்த்தும் உருவாக்கப்பட்டுள்ளன. பின்னணி இசை படத்தின் பக்கபலம்.. ராம்தேவின் ஒளிப்பதிவு,. மலைக்கிராமத்தின் இயல்பான அழகை திரையில் பிரமிப்பாக காட்டியுள்ளது..

மலை கிராம மக்களின் வாழ்வியல் படம் என்றாலும் அதில், மூலிகை ரசம் உள்ளிட்ட புதிய விசயங்களை சேர்த்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார். சாலை வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சுற்றி நகரும் திரைக்கதையில் சஸ்பென்ஸை தக்கவைக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். குறிப்பாக அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருப்பதற்காக இயக்குனரை பாராட்டலாம்.