
சென்னையில் சொந்தமாக கார் ஒட்டி வருகிறார் கிஷோர்.. ஒருநாள் எதிர்பாராமல் சாலையில் பைக்கில் வந்த டிடிஎஃப் வாசன் குறுக்கே வந்த கிஷோரை பார்த்து கெட்ட வார்த்தையால் திட்டி விட்டு செல்கிறார். அந்த அதிர்ச்சியில் இருக்கும்போதே உடனடியாக் இன்னொரு விபத்தில் சிக்குகிறார் கிஷோர்.
ஆனால் காலில் பலமாக அடிபட்டதால் சில மாதங்களுக்கு வண்டி ஓட்ட முடியாத நிலைமை உருவாகிறது. இதனால் தான் ஏற்கனவே பணியாற்றிய ட்ராவல்ஸ் நிறுவனத்தில் தனது காரை வாடகைக்கு விடுகிறார். ஆனால் திடீரென ஒருநாள் அவர் கார் மதுரையில் லாக்கப் மரணம் செய்த இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டு பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகளை பார்க்கிறார். மறுநாள் விசாரணைக்கு ஆஜராகும்படி மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார் கிஷோர்
இதற்கிடையே உணவு டெலிவரி செய்யும் டிடிஎஃப் வாசனுடன் கிஷோரின் தங்கை காதல் வயப்படுகிறார். இடையில் தன்னை திட்டிய டிடிஎப் வாசனை தங்கை காதலிப்பது அறிந்து அதிர்ச்சியாகிறார். இதனால் தன்கையுடனேயே பேசுவதை தவிர்க்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் தான் விசாரணைக்காக மதுரைக்கு செல்லும்போது. அவரை வழியிலேயே போட்டுத் தள்ள ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அப்போது தங்கையின் அறிவுறுத்தலின் பேரில் அங்கே பின்தொடர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் கிஷோரை காப்பாற்றி கமிஷனர் அலுவலகம் அழைத்து செல்கிறார். கிஷோரின் மீது தவறு இல்லை என முடிவாகும் சூழலில் அரசியல் பின்புலம் காரணமாக திடீரென புதிய போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்படும் ஹரீஷ் பெராடி கிஷோரை அரெஸ்ட் செய்து கஸ்டடியில் வைத்து குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு அடித்து துன்புறுத்துகிறார்.
இதன் பின்னணியில் முதல்வரான ஆடுகளம் கிஷோரே இருப்பதால், கிஷோர் இந்த பொய் வழக்கில் இருந்து தப்பினாரா ? டிடிஎஃப் வாசன் கிஷோரை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளித்ததா என்பது மீதிக்கதை.
நடுத்தர வர்க்கத்து பாசமான குடும்ப தலைவனாக, டாக்ஸி ஓட்டுனராக குணசேகரனாக நடித்துள்ளார் கிஷோர் .குடும்ப பாசம், உதவும் குணம், சிக்கலில் மாட்டி தவிக்கும் போது ஏற்படும் மிரட்சி, விரக்தி மற்றும் நெகிழ்ச்சியை உறுதியுடன் சித்தரித்து, தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் டிடிஎப் வாசன் ஓவர் பில்டப் எதுவும் இல்லாமல், கதைக்குள் தன்னை இணைத்துக் கொண்டுள்ளதால் நம்முடன் இருக்கும் ஒரு பழகிய நபர் போல அவரை பார்க்க முடிகிறது. படத்தின் கதைக்கு ஏற்ப ஒரு பைக் ரேஸ் சண்டைக் காட்சியையும் இணைத்துள்ளார்கள். அது படத்தின் ஹைலைட்டான ஒன்று.
கணவரின் நிலைகண்டு பதறும் கிஷோரின் மனைவியாக அபிராமி.. வீட்டிலேயே போலீஸ் டார்ச்சரை குடும்பத்துடன் அனுபவிக்கும் காட்சிகளில் சராசரி பெண்ணின் உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.
மோசமான போலீஸ் அதிகாரிகளாக ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், போஸ் வெங்கட், நல்ல போலீசாக வத்திக்குச்சி திலீபன் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோர் பொருத்தமான தேர்வு.
இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையுடன் பயணித்துள்ளது. ஒளிப்பதிவாளர் எஸ்.பிச்சமணி. இருசக்கர வாகன சேசிங் காட்சியை படமாக்குவதில் கவனம் ஈர்க்கிறார்.
.
இயக்குனர் கருணாநிதி நாம் அடிக்கடி கேள்விப்படும் லாக்கப் டெத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். அதிலும் கடந்த கால ஆட்சியின் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் சம்பவங்களை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கி இருக்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்கிற பதைபதைப்பை ஏற்படுத்தினாலும் மதுரையில் நடைபெற்ற குற்றச் சம்பவத்திற்கு சென்னையில் இருக்கும் டிரைவரை பலியாக்க எதற்கு முயற்சித்தார்கள் என்பதற்கான காரணம் ரொம்ப வீக்காக இருக்கிறது. டெலிவரி பாயாக வேலை பார்க்கும் டிடிஎப் வாசனுக்கு எப்படி விலை உயர்ந்த கார் கிடைக்கிறது என்பது போன்ற விஷயங்களில் கொஞ்சம் லாஜிக் இடிக்கிறது.
மற்றபடி விரைவில் தேர்தல் வர இருக்கும் சூழலில் இதுபோன்ற விழிப்புணர்வு படங்கள் வரவேற்கத்தக்கவை.









