
தொடர் வெற்றிகளை பெற்று வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் இது. கதை 20040-ல் நடைபெறுகிறது.
காதலித்து திருமணம் செய்த எஸ்ஜே சூர்யா, தனது மனைவியுடன் கருத்து வேறுபட்டு பிரிந்து வாழ்கிறார். இதனால் தன்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது என நினைத்து இதற்காக ஒரு தனி ‘ஆப்’ ஒன்றை உருவாக்கி அதன் மூலம் காதலர்கள் தங்களது துணையை தேர்வு செய்யலாம், அவர்களை அடிக்கடி பரிசோதித்து கொள்ளலாம் என்கிற ஒரு வசதியை கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பது போல இருக்கும் இளம்பெண் கிர்த்தி ஷெட்டியை, ஸ்மார்ட்போன் என்றாலே என்னவென்று தெரியாத இளைஞனாக தனது தந்தை சீமானால் வளர்க்கப்பட்ட பிரதிப் ரங்கநாதன் பார்த்ததும் காதல் வயப்படுகிறார். இதனால் தந்தைக்கு தெரியாமல் ஒரு ஸ்மார்ட் போன் வாங்குகிறார். எதிர்பார்த்தபடி காதலும் கைகூட, அதே சமயம் ஒரு கட்டத்தில் காதல் பிரிவும் ஏற்படுகிறது.
இதற்கு எஸ் ஜே சூர்யா கண்டுபிடித்த அந்த செயலி தான், தன்னைப்பற்றி தவறான தகவலை கொடுத்து தங்கள் காதலை பிரித்து விட்டது என்கிறார் பிரதீப் ரங்கநாதன். நிரூபிக்க முடியுமா என சவால் விடுகிறார் எஸ்ஜே சூர்யா. இதில் யாருக்கு வெற்றி கிடைத்தது ? பிரதீப் ரங்கநாதனின் காதல் கைகூடியதா என்பது மீதிக்கதை.
நாயகனாக நடித்து இருக்கும் பிரதீப், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். காதல், நடனம், நடிப்பு என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
நாயகியாக கீர்த்தி ஷெட்டிக்கு அழகுப் பதுமையாக வந்து செல்வதைத் தவிர பெரிய வேலை இல்லை. நாயகியாக கீர்த்தி ஷெட்டிக்கு அழகுப் பதுமையாக வந்து செல்வதைத் தவிர பெரிய வேலை இல்லை. பல காட்சிகளில் நடிப்பும் படுசெயற்கையாகவே தோன்றுகிறது.
மனித காதலுக்கும், உணர்வுகளுக்கும் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியை அளவாக கையாண்டு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை மட்டுமே கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக சீமான் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் ஓரளவு நல்ல நடிப்பை தந்துள்ளார். பிரதீப் தோழியாக வரும் கெளரி கிஷன், யோகி பாபு, பிரதீப் ரங்கநாதனின் நண்பராக நடித்திருக்கும் ஷாரா நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா, ஆனந்தராஜ், சுனில் ரெட்டி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள்.
ரவிவர்மா ஒளிப்பதிவில் இதுவரை இல்லாத ஒரு புது உலகம் நம் கண் முன்பு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. காட்சிகளில் அவ்வளவு நிறங்கள், எலக்ட்ரானிக் கிராபிக்ஸ்கள் என கண்களுக்கு பக்கா விருந்து.
அனிருத் தனது இசையால் படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் பெயர் பெற்றவர். ஆனால் ‘எல்.ஐ.கே’ படத்தில், ஒரே ஒரு பாடலைத் தவிர, அவரது பாடல்களும் பின்னணி இசையும் சொல்லப்போனால் சுமாராகவே உள்ளன
இந்த உலகத்திற்கு தற்போது தேவைப்படும் செய்தியை மிக சுவாரஸ்யமாக பொழுதுபோக்காக ‘எல்ஐகே’ படம் சொல்கிறது. மனிதர்களுக்கும் ஆப்-கும் இடையே நடக்கும் உணர்வு, போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். படத்தின் இரண்டாம் பாதி சற்று மெதுவாக தோன்றினாலும், பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா அதனைச் சிறப்பாகத் தாங்கிப் பிடித்துள்ளனர்.









