Reviews

TN 2026 ; விமர்சனம்


பெயர் தான் கார் நம்பர் போல இருக்கிறதே தவிர முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் வெளியாகி இருக்கும் படம் இது.

வட மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு சினிமாவில் நடிக்க வருகிறார் நட்டி. குல்கந்த் குமார் என்கிற பெயரில் நடிக்க துவங்குகிறார். அவர் சிரமப்பட்ட காலத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த ஜமீன்தாரான தம்பி ராமையா அவருக்கு பண உதவி செய்து படம் எடுத்து அவரை பெரிய ஆளாக்க உதவி செய்கிறார்.

பின்னாளில் அவரை அரசியலிலும் நுழைய செய்து கட்சி ஆரம்பிக்கும் வரை கொண்டு செல்கிறார். இடையில் இருவருக்கும் இடையே சில முரண்பாடுகள் ஏற்படுகின்றன. தம்பி ராமையா நினைத்தபடி நட்டியை வைத்து புதிய கட்சி ஆரம்பித்தாரா ? நட்டி தேர்தலில் போட்டியிட்டாரா ? என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

குல்கந்த் குமார் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் தனது நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். ஒரு சாதாரண இளைஞனாக தொடங்கி, பெரிய நடிகராகவும், பின்னர் அரசியல் தலைவராகவும் மாறும் மாற்றங்களை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். சில முக்கிய காட்சிகளில் அவரது நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.

நட்டியின் வழிகாட்டியாக, கிங் மேக்கராக தம்பி ராமையா நகைச்சுவை நடிப்பில் தன் முந்தைய முத்திரைகளைப் பின்னுக்குத் தள்ளி பட்டையைக் கிளப்புகிறார். குல்கந்த் குமாரை முதல்வராக மாற்ற இவர் போடும் திட்டங்கள் எல்லாம் திரையரங்கில் சிரிப்புச் சரவெடி

நட்டியின் வலது கையாக வரும் ரெடின் கிங்ஸ்லி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். பல இடங்களில் கலகலப்பு ஊட்டி இருக்கிறார்.

தம்பி ராமையாவுடன் சேர்ந்துகொண்டு எம்.எஸ்.பாஸ்கரின் வயதை மீறிய நடிப்பு, வசனம் மற்றும் செயல்பாடுகள், இளவரசுவின் நையாண்டி என கதையின் முக்கிய தூண்களாக மாறிவிட்டார்கள் மூவரும்..

நட்டியின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீதா ராவ், பரதநாட்டிய கலைஞராக நடிப்பு மற்றும் நடனத்தில் அசத்தியிருக்கிறார். நடிகையாக வரும் சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா கதை செல்லும் எல்லா காலகட்டத்தையும் நினைவுபடுத்தி ரசிக்க வைக்கிறார். அரசியல் களங்களுடன் ஒத்துப்போகும் விதத்தில் மிக எளிமையாகவும், இயல்பாகவும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்

தர்புகா சிவாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்தை கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

எடுத்துக்கொண்ட கதைக்களம், தற்போதுள்ள அரசியல் சூழல் என மிகவும் காண்ட்ரவர்சியான அதேசமயம் எதிர்பார்ப்பு மிக்க கதைக்களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் உமாபதி ராமையா, ஒரு நடிகரின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தை தைரியமாக சொல்ல முயற்சி செய்துள்ளார். சில வசனங்கள் தற்போதைய சூழ்நிலைகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.