
சென்னையில் உளவுத்துறை அண்டர்கவர் ஆபீசராக வேலை பார்க்கும் ஆர்யாவுக்கு முறைகேடான பல பரிமாற்றங்களை கண்டுபிடிப்பது மட்டுமே வேலை என்பதால் போரடிக்கிறது.. இந்த வேலையை விட்டு காதலி அனகாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகலாமா என நினைக்கும் போது உளவுத்துறை அதிகாரியான மஞ்சு வாரியர் ரஷ்யாவில் எதிரிகளிடம் பிடிபட்டு கிடக்கும் சரத்குமாரையும் அவர் காப்பாற்றி வைத்திருக்கும் 7 நியூக்ளியர் குண்டுகளையும் பத்திரமாக இந்தியாவுக்கு கொண்டு வரும் பொறுப்பை ஆர்யாவிடம் ஒப்படைக்கிறார்.
தனது குழுவினருடன் சென்று நியூக்ளியர் குண்டுகளை கைப்பற்றும் ஆர்யாவுக்கு சரத்குமாருக்கு பதிலாக அங்கே அதுல்யா ரவி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி அவரை இந்தியாவுக்கு அழைத்து வருகிறார். இதன் பின்னணியில் எதிர்முனையாக செயல்படும் கௌதம் கார்த்திக் ராணா என்கிற வேறு ஒருவருக்காக இந்த நியூக்ளியர் குண்டுகளை கைப்பற்றி இந்தியாவில் பிரதமர் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மாமல்லபுரத்தில் ஒன்று கூடும்போது வெடிக்கச் செய்து நாசம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். இதன் பின்னணி என்ன ? ஆர்யாவால் இதை தடுக்க முடிந்ததா ? சரத்குமார் என்ன ஆனார் ? யார் அந்த ராணா என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.
அண்டர் கவர் ஆபீஸராக ஆர்யா பொருத்தமான தேர்வு தான் என்றாலும் அவரது திறமைகளை சொல்லும் விதமாக சில காட்சிகள் உருவாக்கப்படவில்லை என்பது அவர் மீதான நம்பகத்தன்மையை கொஞ்சம் குறைக்கிறது. அதே சமயம் ஆக்சன் காட்சிகள், குறிப்பாக கிளைமாக்ஸில் கௌதம் கார்த்திக் உடன் அவர் மோதும் காட்சிகள் திரில்லிங்கை ஏற்படுத்துகின்றன.
கௌதம் கார்த்திக் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சொல்லவே வேண்டியதில்லை அந்த கதாபாத்திரத்தில் மிகப் பொருத்தமாக பொருந்தி இருக்கிறார் கௌதம் கார்த்திக்.
சரத்குமார், அவரது கதாபாத்திரம் மற்றும் அவரது பின்னணி, அதற்குள் ஒளிந்துள்ள மர்மம் என ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அதில் டுவிஸ்ட் இருந்து கொண்டே இருக்கிறது. அவரும் அதை சரியாக பிரதிபலித்திருக்கிறார்.
உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் ஏக பொருத்தம். கதாநாயகிகளாக ஆரியாவின் காதலியாக அனகா பாந்தமான நடிப்பு என்றால் மர்ம -பெண்ணாக வரும் அதுல்யா ரவியும் தன் பங்கிற்கு அதகளம் பண்ணுகிறார். காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலரும் எங்களது பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயீரூட்டுவதற்கு திபு நினன் தாமஸ் கடுமையாக உழைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் பிரமாண்டமான லொக்கேஷன்கள் மூலம் காட்சிகளை பிரமாண்டமாக காட்டியிருக்கிறார்.
ஏழு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் மனு ஆனந்த். உளவுத்துறை படம் என்றாலும் பாகிஸ்தான் போன்று வெளிநாடுகளுக்குள்ளே கதை நடக்கும் விதமாக இல்லாமல் இந்தியாவிற்கு உள்ளேயே அதுவும் தமிழ்நாட்டிற்குள்ளேயே கதை நடப்பது போன்று உருவாக்கப்பட்டு இருப்பதால் கொஞ்சம் ஏமாற்றம் தருகிறது.
அதே சமயம் படத்தில் எங்கும் போரடிக்காமல் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த். இந்த படத்திற்காக அவர் மேற்கொண்டிருக்கும் ஆய்வுகள் ஆச்சரியப்படுத்துகின்றன. அந்த வகையில் உளவாளி சம்பந்தமான படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு மிஸ்டர் எக்ஸ் ஒரு நல்ல அனுபவத்தை தரும்.









