
பிரபல எழுத்தாளர் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் நாவலை தழுவி உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் இந்த ரேகை.
ஒரே நாளில் நடக்கும் சம்பவத்தில் வெவ்வேறு இடங்களில் நான்கு பேர் இறந்து போகிறார்கள். அந்த நான்கு பேரின் கைரேகைகளுமே ஒன்றாக இருக்கிறது. முதலில் இறந்து போன, தனது நெருக்கமான தம்பி போன்ற ஒருவரின் மரணத்தை ஆராய துவங்கும் போலீஸ் அதிகாரியான பாலஹாசனுக்கு போகப் போக இந்த உண்மை தெரிய வருகிறது.
எப்படி இது சாத்தியம் என விசாரிக்கிறார். இதன் பின்னணியில் அடுக்கடுக்கான மருத்துவ மோசடி கலந்த உண்மைகள் தெரிய வருகின்றன. நான்கு ரேகைகளும் ஒன்று போல் இருக்க என்ன காரணம் ? அப்படி என்ன மருத்துவ மோசடி ? அதை பாலஹாசன் கண்டுபிடித்தாரா என்பது மீதிக்கதை.
நடிகர் பாலஹாசன். போலீஸ் அதிகாரிக்கு ஏற்ற கட்டுமஸ்தான உடல்வாகு, அழகான முகத்தோற்றம், எதார்த்தமான நடிப்பு என முதல் காட்சியிலிருந்து நம்மை கவர்ந்து விடுகிறார்.
அவருக்கேற்ற ஜோடியாக லேடி கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பவித்ரா ஜனனி. துருதுருப்பும், துடுக்குத்தனமான பேச்சும், ரொமான்ஸ் கலந்த பார்வையும் என ரசிகர்களுக்கு எந்த குறையும் வைக்காமல் நடிப்பு விருந்து அளித்துள்ளார்.
அரசு மருத்துவராக வினோதினி வைத்தியநாதன் கதை ஓட்டத்தில் இறுதியில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் ஒரு வேலையையும் செய்துள்ளார். இவர்களை தவிர ஒரு மிகப்பெரிய மருத்துவ நெட்வொர்க்கை அமைத்து மோசடி செய்யும் கும்பலாகவும் மற்றும் காவல்துறை அதிகாரிகளாகவும் நடித்த பலரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதால் கதையோட்டத்துடன் நம்மாலும் இணைந்து பயணிக்க முடிகிறது.
மகேந்திரா எம் ஹென்றியின் விறுவிறுப்பான ஒளிப்பதிவும் கிரைம் திரில்லருக்கே உண்டான திகில் ஊட்டும் ராஜ் பிரதாபின் பின்னணி இசையும் மொத்த எபிசோடுகளையும் தொய்வு ஏற்படாமல் பக்கபலமாக தாங்கி பிடித்திருக்கின்றன.
ராஜேஷ்குமார் உச்சகட்ட காலத்தில் இருந்த சமயத்தில் திரையுலகம் அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த வெப் சீரிஸ் இனி அவரை தமிழ் சினிமாவில் பிஸியான கதாசிரியராக மாற்றும் என்பதில் ஐயமில்லை.
ராஜேஷ்குமார் நாவல்களில் அடுத்து என்ன நடக்கிறது என்று யூகிக்க முடியாது. அதேபோல எதிர்பாராத திருப்பங்களும் ஏற்படும். அப்படி நாவலில் படித்த உணர்வை இந்த வெப் சீரிஸில் ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒரு திடுக்கிடும் திருப்பம் என சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் தினகரன்.









