Reviews

ஒண்டிமுனியும் நல்லபாடனும் ; விமர்சனம்


கிணற்றில் தவறி விழுந்து சாகக்கிடந்த தனது சிறு வயது மகனை எப்படியாவது காப்பாற்றினால், தான் வளர்க்கும் ஆட்டுக்குட்டியை ஒண்டிமுனிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டுகிறார். மகனும் பிழைத்துக் கொள்கிறார். ஆனால் ஊர் பிரச்சனையில் கோயிலுக்கு பங்குதாரர்களான பங்காளிகள் இருவர் ஈகோ மோதலால் பல வருடங்களாக கோவில் பூட்டி கிடைக்கிறது.

மகனும் வளர்ந்து இளைஞனாக, குட்டியும் கிடாயாக வளர்ந்து நேர்த்திக்கடனுக்கு தயாராகிறது. இரண்டு ஊர் தலைவர்களிடமும் கெஞ்சுகிறார் தந்தை நல்லபாடன். முதலில் மறுத்தாலும், தனது நிலம் பறிபோகாமல் இருக்க, நல்லபாடன் பகுதி மக்களின் நிலத்தை அரசுக்கு தாரை வார்க்க முடிவு செய்யும் ஊர் தலைவர், கோவில் திறக்க அதற்கு ஒப்புக்கொள்கிறார்.

கோவில் திறக்கிறது. நேர்த்திக்கடன் செலுத்தும் நேரமும் வருகிறது. அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன ? பாருங்கள் ஒண்டி முனியும் நல்லபாடனும் படத்தை.

இந்த படத்தில் முழு நீள கதையின் நாயகனாக படு எதார்த்தமாக நடித்து மொத்த படத்தையும் தாங்கி பிடித்து நிறுத்தி இருக்கிறார் பரோட்டா முருகேசன்.. இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரி பரோட்டா சாப்பிடும் காமெடியில் அவருக்கு பரோட்டா சப்ளை செய்பவராக நடித்திருந்தவர். எப்படியாவது ஆட்டுக்கிடாயை சாமிக்கு நேர்த்திக்கடனாக செலுத்தி விட வேண்டும் துடிக்கும் காட்சிகளில் ஒரு ஏழை கிராம விவசாயியை கண் முன் நிறுத்துகிறார்..

பெரிய பண்ணையாராக நடித்திருக்கின்ற கார்த்திகேசன் தனது முரட்டுத்தனமாக தோற்றத்தாலும் நரித் தந்திரமான செயல்களாலும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை இருக்கிறார். அதே போல கொஞ்சம் காமெடி கலந்த இன்னொரு கதாபாத்திரத்தில் சிறிய பண்ணையாராக நடித்திருக்கும் முருகன் தன் பங்கிற்கு ஸ்கோர் செய்கிறார்..

முருகனின் மனைவியாக வருபவரின் எதார்த்தமான கொங்கு பாஷை வசனங்கள் தியேட்டரில் கைதட்டலை அள்ளுகின்றன. பரோட்டா முருகேசன் மகனாக நடித்திருக்கும் விஜயன் குடும்பப் பொறுப்பை உணராத தனது பொறுப்பற்ற தன்மையை மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். தந்தையின் கஷ்டம் உணர்ந்து மகளாக நடித்திருக்கும் சித்ரா நடராஜன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதேபோல விஜய் சேனாதிபதி பேரனாக நடித்திருக்கும் சிறுவன் உள்ளிட்ட பலரும் மிகப் பொருத்தமான தேர்வு தான்.

பின்னணி இசை மூலமாக மட்டுமே இந்த படத்தை தொய்வு இல்லாமல் நகர்த்தி இருக்கிறார் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன். ஒரு கிராமத்திற்குள்ளேயே 2 மணி நேரம் நாமும் வாழ்ந்த அந்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விமல்.

கிட்டத்தட்ட விருதுக்கு அனுப்பப்படும் வகையிலான படம் என்றாலும் கூட, அதை ஒரு நேர்த்தியாக வெகுஜன ரசிகர்கள் கூட ரசிக்கக் கூடிய வகையில் அடுத்து என்ன நடக்கும் என்கிற பதைப்பை நமக்கு ஏற்படுத்தும் விதமாகவே காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் சுகவனம், இதை சாதாரண படம் என்று ஒதுக்கி விடாமல் நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு அருமையான வாழ்வியல் பாடத்தை கொடுத்திருக்கிறார்..