
தனது அக்கா குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அம்மா ராதிகா மற்றும் தங்கையுடன் தயாராகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த சமயத்தில் மிகப்பெரிய தாதாவான சூப்பர் சூப்பராயன் போதையில் தான் செல்ல வேண்டிய விலைமாதுவின் வீட்டிற்கு செல்வதற்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறார்.. அங்கே எதிர்பாராமல் ஏற்படும் தள்ளுமுள்ளுவில் அவர் கீழே விழுந்து இறந்து விடுகிறார்.
இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மறுநாள் பிணத்தை கமுக்கமாக அப்புறப்படுத்த திட்டமிடுகிறார்கள் ராதிகாவும் கீர்த்தியும். அதேசமயம் சூப்பர் சுப்பராயன் அந்த விலைமாதுவின் வீட்டிற்கு வந்தால் போட்டுத்தள்ள அங்கே காத்துக் கொண்டிருந்த எதிர் தரப்பு கும்பலுக்கு இது அதிர்ச்சி தருகிறது.
சூப்பர் சுப்பராயனின் தலைக்கு பல கோடி விலை பேசி எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார் எதிர் கும்பலை ஏவிய அஜய் கோஷ். மறுநாள் செகண்ட் கேண்டில் தனது அக்காவின் கணவருக்கு கொடுப்பதற்காக ஒரு காரை வாங்கும் கீர்த்தி சுரேஷ், அந்த பிணத்தை அந்த கார் மூலம் அப்புறப்படுத்த முயற்சி எடுக்கிறார். அதில் இருக்கும் உடலை கைப்பற்ற எதிர் தரப்பு கும்பல் பின் தொடர்கிறது.
இதற்கிடையே தனது தந்தையை காணவில்லை என்று சூப்பர் சூப்பராயனின் மகன் சுனில் மற்றும் ரெடின் கிங்கிலி ஆகியோர் தங்களது பரிவாரங்களுடன் விசாரித்து தேடுகின்றனர். இந்த களேபரத்தில் எதிர்பாராத விதமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் பழைய பகை காரணமாக கீர்த்தி சுரேஷ் வழியில் குறிப்பிடுகிறார்.
அடுத்து என்ன நடந்தது ? கீர்த்தி சுரேஷ் சிக்கினாரா அல்லது தங்கள் திட்டப்படி பிணத்தை அப்புறப்படுத்தினார்களா ? எதிர் தரப்பினர் சூப்பர் சுப்பராயனின் உடலை கைப்பற்றினார்களா ? சுனில் தன் தந்தையின் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாரா என பல கேள்விகளுக்கு இடைவேளைக்கு பிறகான மீதிக்கதை விறுவிறுப்பாக பதில் சொல்கிறது.
கதையின் நாயகி கீர்த்தி சுரேஷ் என்றாலும் அவரது அம்மாவாக நடித்திருக்கும் ராதிகாவுக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரிவால்வர் ரீட்டா என டைட்டில் வைக்கப்பட்டிருந்தாலும் ரீட்டாவான கீர்த்தி சுரேஷ் எப்போது ரிவால்வரை தூக்கப் போகிறார் என ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார். அதிலும் கடைசியில் துப்பாக்கி வைத்திருக்கும் அந்த இளைஞனை பேச்சால் வசியப்படுத்துவது செம அப்ளாஸ் அள்ளுகிறது.
அதேபோல ராதிகாவும் தன் பங்கிற்கு கடவுளிடம் வேண்டுதல், ரவுடிகளை திட்டுதல், மருமகனை அடித்தல் என கிடைக்கும் இடங்களில் காமெடியில் ஸ்கோர் பண்ணுகிறார். ஒரு காட்சியில் அவர் பேசும் வசனம் கைதட்டலை அள்ளுகிறது. அது என்ன என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
போலீஸ் அதிகாரியாக நக்கல், நையாண்டி கலந்து திமிரும் தெனாவட்டுமாக கீர்த்தி சுரேஷ் குடும்பத்திற்கு இடைஞ்சல் கொடுக்கும் ஜான் விஜய் வழக்கம் போல அவரது நடிப்பை குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார். சூப்பர் சூப்பராயனின் மகனாக வரும் சுனில், படம் முழுவதும் குறைவான வசனங்களை பேசினாலும் நடிப்பால் டெரர் காட்டி இருக்கிறார்.
அவரது தம்பியாக ரெடின் கிங்ஸ்லி வழக்கம் போல என்றாலும் சில இடங்களில் ஒன்லைனர்களால் சிரிக்க வைக்கிறார். குறிப்பாக அண்ணன் தன்னை கதவுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட அவர் அங்கிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சி விலா நோக சிரிக்க வைக்கிறது.
படம் முழுவதும் உயிரற்ற உடலாக பொறுமையுடன் நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயனையும் பாராட்டியாக வேண்டும். பிணத்தை தேடும் கும்பலாக நடித்திருக்கும் சென்றாயன் கேங்கும் ஜான் விஜய்யுடனான காமெடி காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்கள். அதேபோல சூப்பர் சுப்பராயன் தலையை ஆவலுடன் எதிர்பார்க்கும் அஜய் கோஷின் காட்சிகள் எல்லாம் அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும் என்கிற ரோபோ சங்கரின் காமெடி போல சிரிப்பை வரவழைக்கிறது.
படம் முழுவதும் பாண்டிச்சேரியிலேயே படமாக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு அருமையான லொகேஷனை சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து நமக்கு விருந்தாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். கூடவே ஷான் ரோல்டனின் இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கிறது.
இயக்குனர் ஜே.கே சந்துரு ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு அதற்குள் பல சிக்கல்களை புகுத்தி அதேசமயம் ஒவ்வொன்றையும் சிக்கல் இல்லாமல் அழகான திரைக்கதை மூலம் படமாக நமக்கு கொடுத்திருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பின்னணி, ஒவ்வொருவரிடமும் இன்னொரு குரூப் எப்படி சிக்குகிறார்கள், எப்படி தப்பிக்கிறார்கள் என காட்சிக்கு காட்சி பரபரப்புக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜே.கே சந்துரு.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த ரிவால்வர் ரீட்டாவை படம் முழுவதும் சிரித்தபடி ரசித்துப் பார்க்கலாம்.









